இந்தியா பல விஞ்ஞானிகளை உருவாக்கி உள்ளது நமக்கு பெருமையே - பிரதமர் மோடி


இந்தியா பல விஞ்ஞானிகளை உருவாக்கி உள்ளது நமக்கு பெருமையே - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 5 Nov 2019 1:27 PM GMT (Updated: 5 Nov 2019 1:27 PM GMT)

இந்தியா பல விஞ்ஞானிகளை உருவாக்கி உள்ளது நமக்கு பெருமையே என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சாதனை மாணவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில்நிபுணர்கள், விவசாயிகள், அறிவியலாளர்கள் ஆகியோருடன் இணைந்து கொண்டாடும் வகையிலும், உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் அனைத்து இந்தியர்களையும் அரவணைத்து செல்லும் வகையிலும் சர்வதேச இந்திய அறிவியல் திருவிழாவினை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.

அந்த வகையில் 5-வது சர்வதேச இந்திய அறிவியல் திருவிழா மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிஸ்வ பங்களா கன்வென்ஷன் சென்டர் மற்றும் கொல்கத்தா அறிவியல் நகரம் ஆகிய 2 இடங்களில் இன்று  முதல் 8-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் இருந்தவாறு ‘காணொலி’ காட்சி மூலமாக நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:- 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இல்லாமல் எந்த  நாடும் முன்னேறியது இல்லை.  இந்தியா பல விஞ்ஞானிகளை உருவாக்கி உள்ளது. இதனால் நமக்கு பெருமை. தற்போதுள்ள தலைமுறையினரும் அறிவியலில் ஆர்வம் கொண்டுள்ளனர். எதிர்காலம் குறித்து நமது கடமை பல மடங்கு அதிகரித்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை, மனித மாண்புகளுடன் கொண்டு செல்வது நமது கடமை. கண்டுபிடிப்புக்கும், ஆராய்ச்சிக்கும். அரசு ஆதரவு வழங்கி வருகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சுற்றுச்சூழல் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன், செயலாளர் ஆசுதோஷ் சர்மா உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த அறிவியல் திருவிழாவில் பெண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கு உள்பட 28 வகையான நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.

Next Story