மல்லிகார்ஜுன கார்கேவை முதல் மந்திரியாக்க கூடாது என நான் கூறினேனா? சித்தராமையா விளக்கம்


மல்லிகார்ஜுன கார்கேவை முதல் மந்திரியாக்க கூடாது என நான் கூறினேனா? சித்தராமையா விளக்கம்
x
தினத்தந்தி 12 Nov 2019 7:28 AM GMT (Updated: 12 Nov 2019 7:28 AM GMT)

மல்லிகார்ஜுன கார்கேவை முதல் மந்திரியாக்க சித்தராமையா எதிர்ப்பு காட்டியதாக தேவேகவுடா கூறியிருந்தார்.

பெங்களுரூ,

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவேகவுடா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.  இதனால் காங்கிரஸ்- ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்தது. கூட்டணி சார்பில் காங்கிரசை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவை முதல்-மந்திரியாக்கும்படி நாங்கள் கூறினோம். 

இதுபற்றி காங்கிரஸ் மேலிட தலைவர்களான குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட் ஆகியோரிடம் தெரிவித்தோம். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக குமாரசாமிக்கு முதல்-மந்திரி பதவி கொடுத்தனர்.  மல்லிகார்ஜுன கார்கேவை முதல் மந்திரியாக்க சித்தராமையா ஒப்புக்கொள்ளவில்லை “ என்று தெரிவித்து இருந்தார்.  தேவேகவுடாவின் இந்த கருத்து கர்நாடக காங்கிரசில் சலசலப்பை  ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், தேவேகவுடா கருத்துக்கு பதில் அளித்துள்ள கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையா, “  தேவேகவுடாவின் கூற்று அடிப்படை ஆதாரமற்றது. என்னிடம் இது பற்றி யாருமே விவாதிக்கவில்லை. கட்சியின்  உயர்மட்ட குழு முடிவு செய்து ஜே.டி.எஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. நான் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனவும் கட்சியின் உயர்மட்ட முடிவு என்று மட்டுமே என்னிடம் கூறப்பட்டது” என்றார். 

Next Story