மராட்டியத்தில் சந்தேகமின்றி சிவசேனாவை சேர்ந்தவரே முதல் மந்திரி ஆவார்; சஞ்சய் ராவத் எம்.பி.


மராட்டியத்தில் சந்தேகமின்றி சிவசேனாவை சேர்ந்தவரே முதல் மந்திரி ஆவார்; சஞ்சய் ராவத் எம்.பி.
x
தினத்தந்தி 16 Nov 2019 1:23 PM GMT (Updated: 16 Nov 2019 1:23 PM GMT)

மராட்டியத்தில் சந்தேகமின்றி சிவசேனாவை சேர்ந்தவரே முதல் மந்திரி ஆவார் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

புனே,

மராட்டிய சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை. முதல்-மந்திரி பதவியில் சிவசேனா பங்கு கேட்டதால் இந்த நிலை ஏற்பட்டது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் களம் இறங்கிய சிவசேனாவின் கனவும் தகர்ந்தது. 

ஆட்சி அமைப்பதற்கு 3 நாள் அவகாசம் கேட்ட அக்கட்சியின் கோரிக்கையை நிராகரித்த கவர்னர் பகத்சிங் கோஷியாரி 3-வது பெரிய கட்சியான சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். உரிய நேரத்தில் யாரும் ஆட்சியமைக்க முன்வராததால் கடந்த 12ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

தேர்தல் முடிவு வெளியான நாளில் இருந்து தங்கள் கட்சியை சேர்ந்தவர் தான் மராட்டியத்தின் அடுத்த முதல்-மந்திரி என கூறி வரும் சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் முயற்சியில் இருந்து இன்னும் பின்வாங்கவில்லை.

இதற்கிடையே, சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி. செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, நாடாளுமன்றத்தில் சிவசேனாவை சேர்ந்த 2 எம்.பி.க்களின் இருக்கைகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன என எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது.  நாங்கள் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இனி அமர்வோம் என கூறினார்.

மராட்டியத்தில் சந்தேகமின்றி சிவசேனா தலைமையில் ஆட்சி அமையும் என்றும் எங்களது கட்சியை சேர்ந்தவரே முதல் மந்திரி ஆவார் என்றும் அவர் உறுதியுடன் மீண்டும் கூறியுள்ளார்.

Next Story