டெல்லியில் காற்றுமாசு மோசமான நிலையை நாளை அடையும் - வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்


டெல்லியில் காற்றுமாசு மோசமான நிலையை நாளை அடையும் - வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்
x
தினத்தந்தி 2 Dec 2019 10:26 AM GMT (Updated: 2 Dec 2019 11:31 AM GMT)

டெல்லியில் காற்றுமாசு மோசமான நிலையை நாளை அடையும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காற்று மாசை குறைக்க டெல்லி அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியை சுற்றியுள்ள வயல்வெளிகளில் விவசாயிகள் காய்ந்த சருகுகள் முதலியவற்றை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். சில பகுதிகளில் கட்டிட பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக காற்றில் ஈரப்பதம் அதிகரித்ததன் காரணமாக காற்று மாசு சற்று குறைந்து, காற்றின் தரம் ஓரளவு மேம்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியுள்ளது.

மேலும் நாளை , காற்று மாசு மிகவும் மோசடையும் என காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி அமைப்பு (SAFAR) தெரிவித்துள்ளது. 

இன்று காலை 9 மணியளவில் டெல்லியில் காற்று தரக்குறியீடு 266 ஆக இருந்தது. வெப்பநிலை அதிகபட்சமாக 23.4 டிகிரியும் குறைந்தபட்சமாக 8 டிகிரியும் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story