ஐதராபாத் என்கவுண்ட்டர்: தலைவர்கள் கருத்து


ஐதராபாத் என்கவுண்ட்டர்: தலைவர்கள் கருத்து
x
தினத்தந்தி 6 Dec 2019 9:45 PM GMT (Updated: 6 Dec 2019 9:45 PM GMT)

ஐதராபாத் ‘என்கவுண்ட்டர்’ சம்பவம் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐதராபாத்,

மேனகா காந்தி

குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி:- இந்த பலாத்கார சம்பவம், பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அதன்விளைவாக ‘என்கவுண்ட்டர்’ நடந்துள்ளது.

பா.ஜனதா மூத்த தலைவர் மேனகா காந்தி:- உங்கள் விருப்பத்துக்காக கொலை செய்யக்கூடாது. சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்புறம் கோர்ட்டு, சட்டம் எதற்கு இருக்கிறது? எப்படி இருந்தாலும், அந்த குற்றவாளிகள் கோர்ட்டால் தூக்கிலிடப்பட்டு இருப்பார் கள்.

ஜெயா பச்சன்

சமாஜ்வாடி எம்.பி. ஜெயா பச்சன்:- தாமதமாக நடந்தாலும் சரியான நடவடிக்கை.

பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகி:- எதிர்கால கற்பழிப்பு முயற்சிகளுக்கு தடுப்பரணாக அமையும். போலீசாருக்கு ஆயுதங்கள் கொடுக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் தப்பி ஓடும்போது, அவற்றை பயன்படுத்தியே ஆக வேண்டும்.

சசிதரூர்

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்:- விவரங்கள் வெளிவரும்வரை, அவசரப்பட்டு கண்டனம் தெரிவிக்கக்கூடாது. சட்டத்துக்கு அப்பாற்பட்ட கொலைகள், சட்டரீதியான சமுதாயத்தில் ஏற்புடையது அல்ல.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்:- கற்பழிப்பு என்பது கொடும் குற்றம். அதை சட்டத்துக்கு உட்பட்டு கடுமையாக அணுக வேண்டும். என்கவுண்ட்டர் கொலைகள், நமது அமைப்புமுறையில் விழுந்த கறை. உடனடி நீதிக்கான தேவை எனக்கு புரிகிறது. ஆனால் அதை அடையும் வழி இது அல்ல.

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்:- ‘என்கவுண்ட்டர்’ கொலைகளை மக்கள் கொண்டாடுவதை பார்க்கும்போது, குற்றவியல் நீதி பரிபாலனம் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதை காட்டுகிறது. இது கவலைக்குரியது. எனவே, நீதி பரிபாலனத்தை வலுப்படுத்த வேண்டும்.

ப.சிதம்பரம்

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம்:- இதுதொடர்பான விவரங்கள் எனக்கு தெரியாது. இதன் உண்மைத்தன்மை குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல்:- போலீஸ் பிடியில் இருந்து குற்றவாளி தப்பிஓட முயன்றால், போலீசாருக்கு இதைத்தவிர வேறு வழி இல்லை. இந்த விஷயத்தில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்:- குற்றவாளிகளை ‘என்கவுண்ட்டரில்’ சுட்டுக்கொன்றதில் தவறு கிடையாது. இதுபோல் கடுமையான தண்டனைகள் கொடுத்தால்தான் வருங்காலங்களில் பெண்கள் பாதுகாப்பாக செல்ல முடியும் என்ற நிலை வரும்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்:- இதை நான் வரவேற்கிறேன். பெண்களை போதைப்பொருளாக கொண்டு, வன்புணர்வு செய்து கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு மரணத்தை தவிர வேறு எதுவும் சிறந்த தண்டனையாக இருக்க முடியாது.

சரத்குமார்

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி:- பெண்களை கற்பழிப்பவர்கள், படுகொலை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இது இறைவன் கொடுத்த தண்டனை.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு பாரபட்சமின்றி உச்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த என்கவுண்ட்டர் நடந்தேறி இருப்பது, இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுப்பதற்கான முயற்சியாக கருதி பாராட்டுகிறேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:- தப்பி ஓட முயன்ற குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைத்து உள்ளது. நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் பாலியல் தொல்லை என்பதே இருக்கக்கூடாது. ஒழுக்கமற்ற செயலில் யாரும் ஈடுபட கனவில் கூட நினைக்கக்கூடாது என்பதற்கு இது ஒரு பாடம்.


Next Story