கர்நாடகாவில் எடியூரப்பா அரசு தப்புமா? 15 தொகுதி இடைத்தேர்தல் -இன்று ஓட்டு எண்ணிக்கை


கர்நாடகாவில் எடியூரப்பா அரசு தப்புமா?  15 தொகுதி இடைத்தேர்தல் -இன்று ஓட்டு எண்ணிக்கை
x
தினத்தந்தி 9 Dec 2019 12:59 AM GMT (Updated: 9 Dec 2019 2:47 AM GMT)

கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று (திங்கட் கிழமை) எண்ணப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. அதே நேரத்தில் கூட்டணி அரசுக்கு எதிராக செயல்பட்டதாலும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக உள்ளன.

அந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர், ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி ஆகிய 2 தொகுதிகளை தவிர்த்து மற்ற 15 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் போட்டியிட்டனர். சிவாஜிநகர் தொகுதியில் தமிழரான சரவணாவும், ராணி பென்னூர் தொகுதியில் அருண்குமாரும் பா.ஜனதா சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்டு இருந்தனர்.

காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் 15 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 12 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இடைத்தேர்தலை சந்தித்து இருந்தது. 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக 68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 

இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) எண்ணப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

எடியூரப்பா ஆட்சி நீடிக்குமா?

கர்நாடகத்தில் தற்போது முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதா கட்சிக்கு 105 எம்.எல்.ஏ.க்களும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ.வின் ஆதரவும் உள்ளது. இடைத்தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நீடிக்கும். 6 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை எனில் எடியூரப்பா தலைமையிலான ஆட்சி கவிழும் நிலை ஏற்படும்.

இடைத்தேர்தலில் 6 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற முடியாமல் போனால், மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து, அக்கட்சிகளின் தலைவர்கள் பேசி வந்தனர். இதனால் இடைத்தேர்தலில் 6 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுமா?, மாநிலத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சி மலருமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களின் எதிர்காலம்

இதற்கிடையில், இடைத்தேர்தல் முடிந்த பின்பு கடந்த 5-ந் தேதி வெளியான கருத்து கணிப்புகளின்படி 15 தொகுதிகளில் பா.ஜனதா 9 முதல் 12 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் கருத்து கணிப்பு முடிவுகள் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதனால் இடைத்தேர்தல் முடிவுகளை முதல்-மந்திரி எடியூரப்பா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். அத்துடன் இடைத்தேர்தல் முடிவுகள் 13 தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாகவும் உள்ளது. இதன் காரணமாக 13 தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களும் இடைத்தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.


Next Story