ரேப் இன் இந்தியா: மக்களவையில் இருக்கத் தகுதியில்லாதவர் ராகுல்காந்தி - ராஜ்நாத் சிங்


ரேப் இன் இந்தியா: மக்களவையில் இருக்கத் தகுதியில்லாதவர் ராகுல்காந்தி - ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 13 Dec 2019 9:25 AM GMT (Updated: 13 Dec 2019 9:25 AM GMT)

ரேப் இன் இந்தியா' என்று பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் இருக்கத் தகுதியில்லாதவர் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

புதுடெல்லி,

மத்தியப் பிரதேசத்தின் கோட்டா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நரேந்திர மோடி மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை அறிவித்தார். ஆனால் இங்கே தினமும் 'ரேப் இன் இந்தியா' நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏவால் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அந்த பெண் மோசமான விபத்தில் சிக்கினார். ஆனால், அதைப் பற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

பெண்களைப் படிக்க வைப்போம், பாதுகாப்போம் என்று மோடி அறைகூவல் விடுத்தார். ஆனால் யாரிடமிருந்து பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் கூறவில்லை. பாஜகவினரிடமிருந்து தான் பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்று பேசியிருந்தார்.

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு இன்று மக்களவையில் கடுமையாக எதிரொலித்தது.

ராகுல் காந்தியின் கருத்து குறித்து மக்களவையில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்,

ராகுல் காந்தியின் பேச்சு மக்களவையை மட்டும் வேதனைப்படுத்தவில்லை, ஒட்டுமொத்த நாட்டையும் வருத்தப்பட வைத்துள்ளது. இதுபோன்ற உறுப்பினர் இந்த அவையில் இருப்பதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை.

ராகுல் காந்தி தனது கருத்துக்குப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேக் இன் இந்தியா என்பது இறக்குமதி அதிகமாக இருக்கும் இந்தியாவில், ஏற்றுமதியை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பிரதமர் மோடி மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை கொண்டுவந்தார். 

இதன் மூலம் நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்ற  நோக்கத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், இப்போது சிலர் மேக் இன் இந்தியா என்ற கருத்தையே மோசமாகச் சித்தரிப்பதை ஏற்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story