குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு; டெல்லியில் 3 பேருந்துகளுக்கு தீ வைத்து எரிப்பு


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு; டெல்லியில் 3 பேருந்துகளுக்கு தீ வைத்து எரிப்பு
x
தினத்தந்தி 15 Dec 2019 1:20 PM GMT (Updated: 15 Dec 2019 1:20 PM GMT)

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் ஒன்றில் ஏற்பட்ட வன்முறையில், 3 பேருந்துகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டன.

புதுடெல்லி,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக குடியுரிமை திருத்த சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் இயற்றி உள்ளது.

இந்த சட்டத்தால் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என வடகிழக்கு மாநிலங்களில் அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த சட்டத்தை எதிர்த்து கடந்த சில நாட்களாக அங்கு தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

அசாம், மேற்கு வங்காளம், மேகாலயா மாநிலங்களை தொடர்ந்து குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் ஏற்பட்ட வன்முறையில், குறைந்தது 3 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும், சில கார்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

டெல்லியின் தெற்கு பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அங்குள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் பங்கெடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள்கொண்டுவருவதற்காக போராட்டக்காரர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதுடன், தடியடியும் நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

டெல்லியில் போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைத்தது தாங்கள் அல்ல என்று ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Next Story