குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு : 3-வது நாளாக மம்தா பானர்ஜி பேரணி


குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு : 3-வது நாளாக மம்தா பானர்ஜி பேரணி
x
தினத்தந்தி 18 Dec 2019 10:07 AM GMT (Updated: 18 Dec 2019 10:07 AM GMT)

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி பேரணி நடத்தினார்.

கொல்கத்தா,

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து கொல்கத்தாவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் பேரணி நடத்தினார். நேற்று 2-வது நாளாகவும்  மம்தா பானர்ஜி பேரணி நடத்தினார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, ஒரே வாரத்தில் 3-வது நாளாக இன்றும் மம்தா பானர்ஜி பிரம்மாண்ட பேரணி நடத்தி வருகிறார். இதில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டதால்  கொல்கத்தா நகரம் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது. இன்று 3-வது முறையாக ஹவுரா மைதானத்தில் இருந்து கொல்கத்தா கடற்கரை வரை பேரணி சென்றார்.

பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி 

நீங்கள் (அமித் ஷா) ஒரு பாஜக தலைவர் மட்டுமல்ல, நாட்டின் உள்துறை அமைச்சரும் கூட. தயவுசெய்து நாட்டில் அமைதியை நிலைநாட்டவும். நீங்கள் குடியுரிமை பதிவு, குடியுரிமை சட்ட திருத்தம் ஆகியவற்றை  திரும்பப் பெறுங்கள், இல்லையெனில் நீங்கள் அதை எவ்வாறு செயல்படுத்துகிறீர்கள் என்பதை இங்கே பார்ப்போம் என கூறினார்.

முன்னதாக மம்தா பானர்ஜி பேசும்போது கூறியதாவது:-

மேற்குவங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவு மற்றும் குடியுரிமை திருத்த மசோதாவை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களை யாரும் இங்கிருந்து வெளியேற சொல்ல முடியாது. அனைத்து மதங்கள், ஜாதிகளுக்கும் சம உரிமை உண்டு என நாங்கள் நம்புகிறோம். அனைவரும் இந்த நாட்டின் குடிமக்கள். இவர்களை யாரும் இங்கிருந்து வெளியே அனுப்ப முடியாது என கூறினார்.

Next Story