ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை தீபிகா படுகோனே ஆதரவு


ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை தீபிகா படுகோனே ஆதரவு
x
தினத்தந்தி 7 Jan 2020 3:58 PM GMT (Updated: 7 Jan 2020 3:58 PM GMT)

ஜே.என்.யூ.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்திற்கு நடிகை தீபிகா படுகோனே ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அப்போது, அங்கு முகமூடி அணிந்து வந்த மா்ம ஆசாமிகள் இரும்பு கம்பி, கம்பு போன்றவற்றால் மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர். 

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த தாக்குதல் ஏற்படுத்தியது. சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். தாக்குதல் தொடர்பாக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வந்த நிலையில்,  டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத செயல்கள் அதிகம் நடப்பதால், நாங்கள் தான் இந்த தாக்குதலை நடத்தினோம் என்று இந்து ரக்‌ஷா தள் அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதலை கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியும் ஜே.என்.யூ. வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்,  மாணவர்கள், பேராசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஜே.என்.யூ. வளாகத்திற்கு வெளியே நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு  பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே திடீரென நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். நடிகை மாணவர்களின் போராட்டத்திற்கு  தனது ஆதரவு தெரிவித்தது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story