தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது


தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது
x
தினத்தந்தி 7 Jan 2020 11:18 PM GMT (Updated: 2020-01-08T04:48:58+05:30)

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி தி.மு.க. தரப்பிலும், வக்கீல் ஜெயசுகின் என்பவர் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது.

புதுடெல்லி,

வழக்கை விசாரித்த கோர்ட்டு தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டது. அதன்பேரில் கடந்த மாதம் 27 மற்றும் 30-ந் தேதிகளில் ஊரக உள்ளாட்சி மற்றும் மாவட்ட பகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு கடந்த 2-ந்தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் வக்கீல் ஜெயசுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தியது. ஆனால் நகர்ப்புறம் மற்றும் மாநகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கவில்லை. இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். எனவே தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story