குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்; அதிர்ச்சிகரமான புள்ளிவிவரம் வெளியீடு


குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்; அதிர்ச்சிகரமான புள்ளிவிவரம் வெளியீடு
x
தினத்தந்தி 12 Jan 2020 9:45 PM GMT (Updated: 12 Jan 2020 9:37 PM GMT)

கடந்த 2018-ம் ஆண்டில், நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அதிர்ச்சிகரமான புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

தேசிய குற்ற ஆவண காப்பகம் சமீபத்தில் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதில், கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டை விட 22 சதவீதம் அதிகம்.

அதாவது, 2017-ம் ஆண்டில், ‘போக்சோ’ சட்டத்தின்கீழ், 32 ஆயிரத்து 608 குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் புகார் செய்யப்பட்டன. 2018-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 827 ஆக உயர்ந்தது.

2018-ம் ஆண்டில், 21 ஆயிரத்து 605 குழந்தை கற்பழிப்பு சம்பவங்கள் புகார் அளிக்கப்பட்டன. இவற்றில் 21 ஆயிரத்து 401 சம்பவங்கள், சிறுமிகளையும், 204 சம்பவங்கள் சிறுவர்களையும் சார்ந்தவை.

குழந்தை கற்பழிப்பு சம்பவங்களில் மராட்டிய மாநிலம் (2,832) முதலிடத்திலும், உத்தரபிரதேசம் (2,023) 2-ம் இடத்திலும், தமிழ்நாடு (1,457) 3-ம் இடத்திலும் உள்ளன.

2008-ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 22 ஆயிரத்து 500 ஆக இருந்தநிலையில், 2018-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 764 ஆக உயர்ந்தது. 2017-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 32 ஆக இருந்தது.

2018-ம் ஆண்டில், குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் 44.2 சதவீதமும், ‘போக்சோ’ சட்டத்தில் பதிவான சம்பவங்கள் 34.7 சதவீதமும் நடந்தன. அதே ஆண்டில், காணாமல் போன குழந்தைகள் எண்ணிக்கை 67 ஆயிரத்து 134 ஆகும்.

குழந்தைகளை வைத்து ஆபாசப்படம் எடுத்த சம்பவங்களின் எண்ணிக்கை 781 ஆகும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் உத்தரபிரதேசம் முதலிடத்திலும், மத்தியபிரதேசம், மராட்டியம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. காப்பகங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள், 30 சதவீதம் அதிகரித்துள்ளன. 501 குழந்தை திருமணங்கள் புகாருக்கு உள்ளாகி, தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இது, முந்தைய ஆண்டைவிட 26 சதவீதம் அதிகம்.

அதே சமயத்தில், ஆசிட் வீச்சு சம்பவங்கள் குறைந்துள்ளன. 2017-ம் ஆண்டில் 244 ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடந்தநிலையில், 2018-ம் ஆண்டில் இது 228 ஆக குறைந்தது.

ஆசிட் வீச்சு சம்பவங்களில் மேற்கு வங்காளம் முதலிடத்திலும், உத்தரபிரதேசம், தெலுங்கானா ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.


Next Story