தூக்குதண்டனையை நிறைவேற்ற பிறப்பித்த உத்தரவில் எந்தப் தவறும் இல்லை -டெல்லி ஐகோர்ட் மறுப்பு


தூக்குதண்டனையை நிறைவேற்ற பிறப்பித்த உத்தரவில் எந்தப் தவறும் இல்லை -டெல்லி ஐகோர்ட் மறுப்பு
x
தினத்தந்தி 15 Jan 2020 10:19 AM GMT (Updated: 15 Jan 2020 10:25 AM GMT)

நிர்பயா குற்றவாளி முகேஷ்சிங்கின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22–ந்தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவு (மரண வாரண்டு) கடந்த 7–ந்தேதி பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திகார் சிறையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார். தூக்கு தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து இந்த மனுவை அவர் தாக்கல் செய்திருப்பதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, டெல்லி கோர்ட்டு பிறப்பித்திருந்த மரண வாரண்டுக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு ஒன்றையும்  முகேஷ் குமார் தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரனையின் போது கருணை மனு நிலுவையில் இருப்பதால் ஜனவரி 22-ம் தேதி நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற இயலாது என திகார் சிறை அதிகாரிகள் தரப்பில்  ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது

இது குறித்து திகார் சிரை நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல் ராகுல் மெஹ்ரா

ஒரு மரண குற்றவாளியின் தலைவிதி அவரது கருணை மனுவை ஜனாதிபதி  நிராகரித்த பின்னரே இறுதி நிலைக்கு வருகிறது. கருணை மனுவை நிராகரித்த பின்னர் குற்றவாளிகளுக்கு 14 நாட்கள் அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறும் விதிக்கு நாங்கள் கட்டுப்பட்டிருப்பதால், நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குப் பிறகுதான் இதை நடத்த  முடியும் என கூறினார்.

நிர்பயா குற்றவாளி முகேஷ்சிங்கின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க டெல்லி ஐகோர்ட்  மறுப்பு தெரிவித்து உள்ளது. கீழமை நீதிமன்றத்தை அணுகுமாறு முகேஷ்சிங்கிற்கு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.  தூக்குதண்டனையை நிறைவேற்ற பிறப்பித்த உத்தரவில் எந்தப் தவறும் இல்லை என டெல்லி ஐகோர்ட் கூறி உள்ளது.

Next Story