விசாரணை கோர்ட்டை அணுகி நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை பெற்றுக்கொள்ளலாம் மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


விசாரணை கோர்ட்டை அணுகி  நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை பெற்றுக்கொள்ளலாம்  மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை விசாரணை கோர்ட்டை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங், பவன்குமார் குப்தா, வினய்குமார் சர்மா, அக்‌ஷய்குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் டெல்லி விசாரணை கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் தண்டனையை உறுதி செய்த நிலையில், குற்றவாளிகள் தரப்பில் கருணை மனு, மறுஆய்வு மனு, மற்றும் சீராய்வு மனுக்கள் மாறி, மாறி தாக்கல் செய்யப்பட்டதால் தண்டனையை நிறைவேற்றுவது 2 முறை தள்ளிப்போனது.

தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் உள்ள இந்த தடையை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகமும், டெல்லி சிறைத்துறையும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இந்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், ‘குற்றவாளிகள் ஒரு வாரத்துக்குள் சட்டரீதியான உரிமைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றும், ‘சட்ட உரிமைகளை காரணம் காட்டி தொடர்ந்து காலம் தாழ்த்த முடியாது’ என்றும் கெடு விதித்தார். மேலும் ஒரு வாரக்கெடுவுக்கு பிறகு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்பது தீர்ப்பின் முக்கிய அம்சம் ஆகும்.

மேல்முறையீடு

இருப்பினும் இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசும், சிறைத்துறையும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை கடந்த 7-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், எஸ்.ஏ.போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு குற்றவாளிகளுக்கு தங்களின் சட்டரீதியான உரிமைகளை பயன்படுத்திக்கொள்ள ஒரு வாரகால அவகாசம் வழங்கி இருப்பதால் வழக்கை 11-ந் தேதிக்கு (அதாவது நேற்றைக்கு) ஒத்திவைப்பதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த மனுக்கள் நேற்று நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷண், எஸ்.ஏ.போபண்ணா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

கருணை மனு

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, டெல்லி ஐகோர்ட்டு கடந்த 5-ந் தேதி வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமார் குப்தா இன்னும் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யவில்லை என்றும், மீதமுள்ள 3 குற்றவாளிகளின் கருணை மனுக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

புதிய தேதி

பின்னர் நீதிபதிகள் அளித்த உத்தரவில், ‘ஐகோர்ட்டு விதித்த ஒரு வாரக்கெடு இன்றுடன் (நேற்றுடன்) முடிவடைகிறது. எனவே மத்திய அரசு விசாரணை கோர்ட்டில் 4 குற்றவாளிகளையும் தூக்கில் போடுவதற்கான புதிய தேதியை (மரண வாரண்டு) பெற்றுக்கொள்ளலாம். ஐகோர்ட்டு கடந்த 5-ந் தேதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது குற்றவாளிகள் 4 பேரும் பதில் அளிக்கும் வகையில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். திகார் சிறை சூப்பிரண்டு இந்த குற்றவாளிகளுக்கு கோர்ட்டு நோட்டீசை அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 13-ந் தேதிக்கு (அதாவது நாளை) ஒத்திவைக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டது.

நிர்பயா பெற்றோர் மனு

இதற்கிடையே கருணை மனுவை ஜனாதிபதி ரத்து செய்ததற்கு எதிராக குற்றவாளி வினய்குமார் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் நிர்பயாவின் பெற்றோர் டெல்லி கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளனர். அதில், குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண வாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதி தர்மேந்தர் ராணா, 4 குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, வழக்கை நாளை (அதாவது இன்று) ஒத்திவைப்பதாக தெரிவித்தார்.

Next Story