ஆம் ஆத்மி வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும்? ப. சிதம்பரத்திற்கு பிரணாப் முகர்ஜியின் மகள் கேள்வி


ஆம் ஆத்மி வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும்? ப. சிதம்பரத்திற்கு பிரணாப் முகர்ஜியின் மகள் கேள்வி
x
தினத்தந்தி 12 Feb 2020 4:53 AM GMT (Updated: 12 Feb 2020 4:53 AM GMT)

நமது தோல்வி பற்றி கவலை கொள்ளாமல் ஆம் ஆத்மி வெற்றியை ஏன் கொண்டாட வேண்டும் என ப. சிதம்பரத்திற்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதையொட்டி, அங்கு புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 8-ந்தேதி நடைபெற்றது.  டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் 79 பெண்கள் உள்பட 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 62.59 சதவீத வாக்குகள் பதிவாயின.

ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 22 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.  ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி வேட்பாளர்களே முன்னணியில் இருந்தனர்.  இறுதியில் அந்த கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு 8 இடங்கள் கிடைத்தன.  காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார்.  அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று உள்ளது. ஏமாற்று வேலை மற்றும் வெற்று கோ‌ஷம் தோல்வி அடைந்து உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லியில் வாழும் மக்கள், பா.ஜனதாவின் ஆபத்து மிகுந்த பிரித்தாளும் சூழ்ச்சி மற்றும் வகுப்புவாத அரசியல் திட்டங்களை தோற்கடித்து உள்ளனர். 

மேலும் வருகிற 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ள டெல்லி மக்களை நான் வணங்குகிறேன்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும்  'டெல்லி ஒரு மினி இந்தியா என்பதால் அம்மாநில தேர்தல் அகில இந்திய வாக்கெடுப்புக்கு ஒப்பானது' எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜி, ப. சிதம்பரம் வெளியிட்ட டுவிட்டர் செய்தியை பதிவிட்டு, அதற்கு கேள்வி எழுப்பும் வகையில் தனது பதிவை வெளியிட்டுள்ளார்.  அந்த டுவிட்டர் செய்தியில், பா.ஜ.க.வை வீழ்த்தும் பணி மாநில கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டு உள்ளதா? என பணிவுடன் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

அப்படி இல்லை எனில், நமது தோல்வியை பற்றி கவலை கொள்ளாமல் ஆம் ஆத்மி வெற்றியை ஏன் நாம் புகழ்ந்து கொண்டிருக்க வேண்டும்?  ஆம் எனில், நம்முடைய மாநில காங்கிரஸ் கட்சிகளை மூடி விடலாம் என தெரிவித்து உள்ளார்.

Next Story