ஜப்பானில் சொகுசு கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு


ஜப்பானில் சொகுசு கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
x
தினத்தந்தி 12 Feb 2020 3:41 PM GMT (Updated: 12 Feb 2020 3:41 PM GMT)

ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் பணியாற்றும் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய தூத‌ரகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சீனாவில் ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் உகானில் தோன்றிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவில் இந்த கொடிய வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. 

இந்தநிலையில்  சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்குக்கு சென்றுவிட்டு வந்த டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலை ஜப்பான் தனது பகுதிக்குள் அனுமதிக்காமல் நடுக்கடலில் நிறுத்தி தனிமைப்படுத்தி வைத்துள்ளது.

அந்த கப்பலில் பயணம் செய்த ஹாங்காங்கை சேர்ந்த 80 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதே தனிமைப்படுத்தலுக்கான தூண்டலை ஏற்படுத்தியது.

அதனை தொடர்ந்து, கப்பலில் இருந்த 3,711 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் 20 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் உடனடியாக கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் கப்பலில் இருக்கும் மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 41 பேரும் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். 

இந்நிலையில், இன்று (பிப்.,12) நடைபெற்ற மருத்து பரிசோதனையில் மேலும், பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், கப்பலில் பணியாற்றும் 2 இந்தியர்களுக்கும் பாதிப்பு இருப்பதாக ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதுவரை கப்பலில் பரிசோதிக்கப்பட்டவர்களில் 174 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என மத்திய அரசுக்கு கப்பலில் உள்ளவர்கள் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சொகுசு கப்பலில் 132 பணியாளர்கள் மற்றும் 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் கப்பலில் உள்ளனர்.

இதன் மூலம் டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.  இவர்களில் 28 பேர் ஜப்பானியர்கள் ஆவார்கள்.

Next Story