சிறப்பு ஆயுதப்படை ஆயுதங்கள் மாயம்; சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி


சிறப்பு ஆயுதப்படை ஆயுதங்கள் மாயம்; சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 19 Feb 2020 2:06 PM GMT (Updated: 19 Feb 2020 2:06 PM GMT)

சிறப்பு ஆயுதப்படை ஆயுதங்கள் காணாமல் போன விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரிய மனு கேரள ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

திரிசூர்,

கேரளாவில் சிறப்பு ஆயுதப்படை பட்டாலியனில் இருந்து 25 துப்பாக்கிகள் மற்றும் 12,601 துப்பாக்கி ரவைகள் போன்ற ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் காணாமல் போயுள்ளன என மத்திய தணிக்கை குழு அறிக்கை அளித்துள்ளது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

கேரள உள்துறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு திரிசூரை சேர்ந்த ஜார்ஜ் வட்டுகுளம் என்பவர் கேரள ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சிறப்பு ஆயுத படை பட்டாலியனில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் காணாமல் போயுள்ளன என்று வெளிவந்துள்ள தணிக்கை அறிக்கை தீவிர விவகாரம் ஆகும்.  இது தேசிய பாதுகாப்பில் தாக்கங்களை ஏற்படுத்த கூடும்.

சம்பவம் நடந்து பல நாட்களாகியும் விசாரணையில் முன்னேற்றமில்லை என தெரிவித்துள்ள அவர், இந்த விவகாரம் போலீசாரால் மூடி மறைப்பதற்கான முயற்சி நடக்கிறது என்றும் தெரிவித்து உள்ளார்.

அதனால், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்து உள்ளார்.  இந்த மனு இன்று கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.  ஊடக தகவல்களை அடிப்படையாக கொண்டு இதனை பரிசீலிக்க முடியாது என கூறி அந்த மனுவை 2 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Next Story