மத்திய பிரதேச வைரஸ் மராட்டியத்தில் நுழையாது- சஞ்சய் ராவத் கூறுகிறார்


மத்திய பிரதேச வைரஸ் மராட்டியத்தில் நுழையாது- சஞ்சய் ராவத் கூறுகிறார்
x
தினத்தந்தி 12 March 2020 1:01 AM GMT (Updated: 12 March 2020 1:01 AM GMT)

மராட்டியத்தில் சிவசேனா கூட்டணி அரசு பாதுகாப்பாக உள்ளது. மத்திய பிரதேச வைரஸ் மராட்டியத்தில் நுழையாது என சஞ்சய் ராவத் கூறினார்.

மும்பை, 

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதன்காரணமாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கொரோனா வைரசுடன் இந்த பிரச்சினையை ஒப்பிட்டு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- மத்திய பிரதேசத்தில் உருவாகியிருக்கும் வைரஸ் மராட்டியத்திற்குள் நுழையாது. மராட்டிய ஆட்சியானது வித்தியாசமானது. 100 நாட்களுக்கு முன்பு ஒரு அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து மகா விகாஸ் அகாடி பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்டு மராட்டியத்தை காப்பாற்றியது. சிவசேனா கூட்டணி அரசு பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சரத்பவார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மத்திய பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட நிலைமை மராட்டியத்திலும் ஏற்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து சரத்பவார் கூறுகையில், “ மத்திய பிரதேசம் போன்ற சூழ்நிலை மராட்டியத்தில் இல்லை. மராட்டியத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சரியான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது. உண்மை என்னவென்றால் மராட்டிய அரசுக்கு எதிராக எழுத ஊடகங்களுக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. அப்படியானால் எல்லாம் சரியான முறையில் நடக்கிறது” என்றார்.

Next Story