கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அழியாத மை - மராட்டிய அரசு புதிய முடிவு


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அழியாத மை - மராட்டிய அரசு புதிய முடிவு
x
தினத்தந்தி 17 March 2020 12:02 PM GMT (Updated: 17 March 2020 12:02 PM GMT)

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அழியாத மை வைக்க மராட்டிய அரசு புதிய முடிவை எடுத்துள்ளது.

மும்பை,

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவி வரும் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக மராட்டிய மாநிலத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  மராட்டியத்தில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவிலேயே அதிக பாதிப்பு உள்ள மாநிலமாக மராட்டியம் உள்ளது. இந்த நிலையில் கண்காணிப்பில் இருந்த 7 பேர் கடந்த இரண்டு நாட்களில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, மருத்துவமனைகள் மற்றம் விமான நிலையங்களில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்களின் கையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்றும், எத்தனை நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டியவர்கள் என்ற தேதியையும் அழியாத இங்கில் முத்திரையாகக் குத்துமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம், பொதுஇடங்களில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் பொதுமக்களே அடையாளம் காணும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனிமையில் இருக்க வேண்டியவர்கள், பொதுஇடங்களுக்கு வருவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த  மும்பையில் உள்ள நேரு அறிவியல் மையம்   மார்ச்  31-ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

Next Story