கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்படும் சீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானை கழற்றிவிட்டது


கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவுடன் இணைந்து செயல்படும் சீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானை கழற்றிவிட்டது
x
தினத்தந்தி 2 April 2020 5:38 AM GMT (Updated: 2 April 2020 5:38 AM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்படும் சீனா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானை கழற்றிவிட்டது.

புதுடெல்லி

கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவும் சீனாவும் இந்த நோயைக் கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல் பட்டு வருகின்றன. சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது.  அதன் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கி உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை நெருங்குகிறது.

வைரசை பரப்பிய சீனா இப்போது அங்கு வைரசை கட்டுபடுத்திவிட்டதாக கூறுகிறது.சீனாவின் போட்டி நாடுகள் தான் தற்போது இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன.

இதனால் சீனாவை அனைத்து நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன. சீனா தான் வைரசை பரப்பியது என்றும் அதன் பாதிப்பு கணக்குகள் போலியானவை என்றும் கூறுகின்றன. ஆனால் இந்திய தரப்பில் சீனாவை எந்த குற்றமும் கூறவில்லை. கொரோனாவை ஒழிக்க சீனாவுடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது.

கடந்த வாரம் சீனாவின் மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யியுடனான வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் உரையாடலில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. 

ஜெயசங்கர் வாங்குடனான தனது உரையாடலைப் பற்றி டுவீட் செய்த பின்னர், இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வீடோங், "வைரஸை முத்திரை குத்த வேண்டாம்" என்று இந்தியா ஒப்புக் கொண்டதாகக் கூறியிருந்தார். சன் மீண்டும் புதன்கிழமை ஒரு டுவீட்டில், இந்தியாவும் சீனாவும் ஒரே படகில் பயணம் செய்யும் நண்பர்கள் என்றும் ஒருவருக்கொருவர் உதவ முயற்சிப்பதாகவும் கூறினார்.

இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையில் ஏர் இந்தியா ஒரு சரக்கு விமானப் சேவையை தொடங்கி உள்ளதாக அரசு கடந்த செவ்வாயன்று அறிவித்தது. இது சீனா கொரோனா வைரஸ் தோற்றத்திற்கு பொறுப்பல்ல என்பதை உலகுக்கு உணர்த்துவதை காட்டுவதாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் முக்கியமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கு இந்த சேவை பயன்படுகிறது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து மார்ச் மாதம் பாகிஸ்தான் ஐ.நா.பாதுகாப்புக் குழுவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தது. அதில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை அவசரமாக கருத்தில் கொள்ளுமாறு கேட்டு கொண்டு இருந்தது. அதனை சீனா புறக்கணித்து உள்ளது.  

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி கடந்த மார்ச் 9 அன்று அப்போதைய ஐ.நா.பாதுகாப்பு தலைவரான சீனாவின் ஜாங் ஜுனுக்கு கடிதம் எழுதினார்.அதில்  ஜம்மு காஷ்மீர் முன்னேற்றங்கள் 
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது இதை அவசரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என கோரி இருந்தது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் பாகிஸ்தானின் அவசரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார். இது இந்தியாவைப் பொருத்தவரை சீனாவுடான உறவில் குறிப்பிடத்தக்க திருப்பு முனையாகும்.

ஜம்மு காஷ்மீரின்  சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான இந்தியாவின் முடிவு குறித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்த ஆண்டு ஜனவரி வரை சீனா பகிரங்கமாக வாதிட்டது,  பாதுகாப்பு கவுன்சில் கடந்த ஆண்டு முறைசாரா கூட்டத்தை நடத்தும்படி கட்டாயப்படுத்தியது. இந்த ஆண்டு ஜனவரியில் காஷ்மீரில் மற்றொரு ரகசிய கூட்டத்தை நடத்த சீனா கட்டாயப்படுத்தியது, ஆனால் இதுவும் எந்தவொரு முடிவும் இல்லாமல் முடிவடைந்தது, ஏனெனில் கவுன்சிலில் பெரும்பான்மையானவர்கள் இந்த விவகாரத்தை இருதரப்பு ரீதியாக மட்டுமே விவாதிக்க முடியும் என்று ஒப்புக் கொண்டனர். 

இந்த நிலையில் தான் சீனாவிடம் மாற்றம் தென் பட்டு உள்ளது. இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்ததாக கூறுகிறார்கள்.

Next Story