நாட்டின் சில இடங்களில் ஊரடங்கை தளர்த்தலாம் - பிரதமருக்கு சரத்பவார் யோசனை


File photo
x
File photo
தினத்தந்தி 9 April 2020 1:01 AM GMT (Updated: 9 April 2020 1:01 AM GMT)

நாட்டின் சில இடங்களில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்று என்று பிரதமர் மோடிக்கு சரத்பவார் யோசனை தெரிவித்தார்.

மும்பை,

நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கொரோனா தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி பேசியதாவது:-
கொரோனாவுக்கு எதிரான போராட்டம் நீண்ட கால போராட்டம் ஆகும். இது உலக மற்றும் இந்திய பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. மொத்தத்தில் இப்போது பொருளாதாரரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

மக்களின் வாழ்க்கை மற்றும் உடல் நலம் ஆகியவற்றை உறுதி செய்து சில இடங்களில் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்து பரிசீலிக்கலாம். மாநிலங்களின் வருவாயை அதிகரிக்க ஜி.எஸ்.டி. இழப்பீட்டை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.

கொரோனா தொடர்பாக எந்தவொரு சமூகத்தை குறைகூறுவதோ அல்லது நோயை பரப்புவதாக குற்றம் சாட்டுவதோ சரியானது அல்ல. இப்போது நோய் பரவுவதை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story