கொரோனா எதிரொலி; நாடு முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி வழிபாடுகள் ரத்து


கொரோனா எதிரொலி; நாடு முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி வழிபாடுகள் ரத்து
x
தினத்தந்தி 10 April 2020 4:50 AM GMT (Updated: 10 April 2020 6:56 AM GMT)

கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தீவிர பணியாற்றி வருகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது.  கடந்த மார்ச் 24ந்தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு வரும் 14ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும்.  இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வது தவிர்க்கப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் தவிர்த்து பிற கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு உள்ளன.  அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு உள்ளன.  புனித வெள்ளி தினம் இன்று கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது.  எனினும் கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

கேரளாவில் திருவனந்தபுரம் நகரில் பாளையம் பகுதியில் அமைந்த புனித ஜோசப் பெருநகர ஆலயம், பெருங்கூட்டம் கூடாமல் தவிர்ப்பதற்காக இன்று மூடப்பட்டு உள்ளது.

மராட்டியத்தின் மும்பை நகரில் மஹிம் பகுதியில் உள்ள புனித மைக்கேல் கிறிஸ்தவ ஆலயமும் கொரோனா வைரஸ் தொற்றை தவிர்ப்பதற்காக இன்று மூடப்பட்டு உள்ளது.

டெல்லியில் கோல் தக் கானா பகுதியருகே அமைந்துள்ள புனித இருதய கிறிஸ்தவ ஆலயத்தில் புனித வெள்ளி தினத்தில் நடைபெற இருந்த வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.  ஆலயமும் மூடப்பட்டு இருந்தது.

ஆலய வாசலில், கொரோனா வைரஸ் பாதிப்பினை முன்னிட்டு அனைத்து மதசடங்குகளும் மற்றும் பிற வழிபாடுகளும் அடுத்த உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன.  கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்காக பிரார்த்தனை செய்து கொள்வோம் என அறிவிப்பு பலகை
வைக்கப்பட்டு உள்ளது.

Next Story