மத்திய அரசின் வழிகாட்டுதல்களை கேரள அரசு பின்பற்றுகிறது- முதல் மந்திரி பினராயி விஜயன்


மத்திய அரசின் வழிகாட்டுதல்களை  கேரள அரசு பின்பற்றுகிறது- முதல் மந்திரி  பினராயி விஜயன்
x
தினத்தந்தி 20 April 2020 3:59 PM GMT (Updated: 20 April 2020 3:59 PM GMT)

மத்திய மாநில அரசுகளிடையே எந்த மோதலும் இல்லை என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கொரோனாவின் தீவிரம் குறைந்துள்ளது. இதனால், உள்ளூர் தொழிற்கூடங்கள், சலூன் கடைகள், உணவு விடுதிகள், புத்தக நிலையங்கள், நகரட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறு, குறு தொழில்கள், நகரங்களில் குறைந்த தொலைவுக்கு பேருந்து போக்குவரத்து, இரு சக்கர வாகனங்களில் ஒருவர் மற்றும் 4 சக்கர வாகனங்களின் பின் இருக்கைகளில் 2 பேர் பயணிக்க அனுமதி ஆகியவற்றுக்கு அரசு அனுமதி வழங்கியது.   இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வரும் கேரள அரசு தரப்பில் அறிவிப்பு வெளியானது. 

கேரள அரசின் இந்த ஊரடங்கு தளர்வு நடவடிக்கை, கடந்த 15-ந்தேதி பிறப்பித்த மத்திய அரசின் வழிகாட்டுதல் உத்தரவுகளை மீறுவது மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நீர்த்து போக செய்ய கூடியது என்று கேரள அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம்  கண்டனம் தெரிவித்தது. ஆனால், மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே கேரளா செயல்படுகிறது என்று அம்மாநில அரசு விளக்கம் அளித்தது. 

இந்த நிலையில்,  உள்துறை அமைச்சகத்தின் கடிதம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், “மத்திய மாநில அரசுகளுக்கு இடையே எந்த மோதலும் இல்லை. மத்திய அரசின் வழிகாட்டுதல்களையே கேரளா பின்பற்றுகிறது.  சலூன் கடைகள் கேரளாவில் திறக்கப்படாது. உணவு விடுதிகளில் ஆன்லைன் மூலம் மட்டும் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்படும்.  சலூன் கடைகளை திறப்பது என ஏற்கனவே எடுத்த முடிவுகளுக்கு, நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, கேரள அரசு அந்த முடிவை வாபஸ் பெறுகிறது” என்றார். 

Next Story