எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் கொரோனாவுக்கு பலி; பாதுகாப்பவர்களை குறிவைக்கும் வைரஸ்


எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் கொரோனாவுக்கு பலி; பாதுகாப்பவர்களை குறிவைக்கும் வைரஸ்
x
தினத்தந்தி 7 May 2020 10:15 PM GMT (Updated: 7 May 2020 10:15 PM GMT)

வைரசிடம் இருந்து மக்களை பாதுகாப்பவர்களை குறிவைத்து கொரோனா தாக்கி வருகிறது. அந்த வகையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேரை கொரோனா பலி வாங்கிவிட்டது.

புதுடெல்லி, 

வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்க போராடும் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸ்காரர் களை குறிவைத்து தாக்க தொடங்கி விட்டது கொரோனா.

இந்தியாவில் இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் 500-க்கும் அதிகமான டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய துணை ராணுவப்படையில் பெரிய பிரிவான சி.ஆர்.பி.எப்.பில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கிய கொரோனா, அந்த படையை சேர்ந்த 55 வயது அதிகாரியின் உயிரையும் பறித்துவிட்டது.

இதோடு தனது பாதிப்பை நிறுத்திக் கொள்ளாமல், பிற நாட்டு ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளிடம் நாட்டை பாதுகாக்க எல்லையில் இரவு பகலாக பாடுபடும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்களையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த படையில் ஏற்கனவே 150-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், வைரஸ் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த பி.எஸ்.எப். வீரர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் எல்லை பாதுகாப்பு படையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story