வென்டிலேட்டரில் 38 நாட்கள் : கொரோனாவை வீழ்த்தி குணமாகிய முதல் இந்தியர்


வென்டிலேட்டரில் 38 நாட்கள் : கொரோனாவை வீழ்த்தி குணமாகிய  முதல் இந்தியர்
x
தினத்தந்தி 9 May 2020 12:28 PM GMT (Updated: 9 May 2020 12:28 PM GMT)

கொரோனாவால் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் 38 நாட்கள் இருந்து குணமாகி கொரானாவை வீழ்த்திய முதல் இந்தியரானார் கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர்.

கொல்கத்தா

மேற்குவங்காள மாநிலம் தெற்கு கொல்கத்தா பகுதியை சேர்ந்தவர் முகர்ஜி நிதாய்தாஸ் முகர்ஜி (வயது 52) அவருக்கு கடுமையான இருமல் மற்றும் சளி ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் அவரை அடிக்கடி பாதிக்கும் ஒரு வியாதியின் திரும்பி வருவதாக நினைத்தனர். பின்னர் அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவரது உடல்நிலை மோசமடைந்ததால், டாக்டர்கள் தொண்டையில் ஒரு கீறலை உருவாக்கி, மூச்சுக்குழாயில் மற்றொரு துளை வழியாக நேரடி காற்றுப்பாதையை உருவாக்க ஒரு அறுவை சிகிச்சை முறையான டிராக்கியோஸ்டமி செய்தனர்.

தொடர்ந்து அவரை 38 நாட்கள் வென்டிலேட்டரில் வைத்து இருந்தனர்.38 நாட்கள் வென்டிலேட்டரில் இருந்தபின் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிய  முகர்ஜி, இந்த வார தொடக்கத்தில் வீடு திரும்பினார். அவருக்கு அவரது தெரு மற்றும்  பக்கத்து வீட்டுக்காரர்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது மருத்துவமனை டாக்டர்களின் குறிப்பிடத்தக்க சாதனையாகும், ஒரு கொரோனா  நோயாளி வென்டிலேட்டரில் நீண்ட காலம் வைத்திருந்தால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது

இது குறித்து முகர்ஜி கூறும் போது

எனக்கு ஒரு புதிய வாழ்க்கையை வழங்கிய மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் குழுவுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் . இது எனது இரண்டாவது ஜென்மமாகும்.  அவர்கள் இல்லாமல் நான் இல்லை அவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் என கூறினார்.

முகர்ஜியின் மனைவி அபராஜிதா முகர்ஜி கூறும் போது

எங்களிடம் எந்த வெளிநாடு பயண வரலாறும் இல்லை. ஆனால் கொரோனா அறிகுறிகள் பொருந்தியதால், எது கணவரை  மார்ச் 29 அன்று ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தோம். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அதே இரவில் அவரை வென்டிலேட்டரில் வைத்தனர். அடுத்த நாள், அவரது சோதனை முடிவுகள் கொரோனா தொற்று என்பதைக் காட்டியதுடன், மரணத்துடனான அவரது போர் தொடங்கியது.

அவரது நிலை மிகவும் ஆபத்தானது என்று மருத்துவர்கள் என்னிடம் கூறியிருந்தனர். ஆனால் அவர்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழந்து விடவில்லை தொடர்ந்து போராடினார்கள். என்னால் அவரை மீண்டும் ஒருபோதும் பார்க்க முடியுமா என்று நான் நினைக்கவில்லை,. கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். அவர் ஒரு சமூக சேவகர் மற்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த காலங்களில் அவர் உதவி செய்த, உயிர் பிழைக்க உதவிய அனைவரின் பிரார்த்தனைகளும் பலன் அளித்தது என்று நம்புகிறேன் என்று அபராஜிதா கூறினார்.

மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறி்க்கையில் 38 நாட்கள் வென்டிலேட்டரில் இருந்தபோதிலும், வைரஸை தோற்கடித்த கொரோனா பாதிப்பின் முதல் நோயாளியாக இந்தியாவில் அவர் ஒரு  சாதனையை நிகழ்த்தி உள்ளார் என கூறி உள்ளது

முதல்வர் மம்தா பானர்ஜி அமைத்த ஆலோசனைக் குழுவில் உள்ள மருத்துவர்களில் ஒருவரான சுகுமார் முகர்ஜி கூறும் போது இது உண்மையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். வென்டிலேட்டரில் இருந்து வீடு திரும்புவது அசாதாரணமானது என கூறினார்.


Next Story