தெருவில் நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பணம் தேவை, கடன் அல்ல- ராகுல் காந்தி


தெருவில் நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பணம் தேவை, கடன் அல்ல- ராகுல் காந்தி
x
தினத்தந்தி 16 May 2020 9:28 AM GMT (Updated: 16 May 2020 9:28 AM GMT)

தெருவில் நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு பணம் தேவை, கடன் அல்ல என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து தொழில், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் மீட்டெடுக்கும் வகையில், ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான துறைக்கான சலுகை திட்டங்கள்,  வெளிமாநில தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், விவசாயிகள்  உள்ளிட்டோருக்கான சலுகைகளைக் கடந்த சில தினங்களாக வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில்,   பொருளாதார தொகுப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஷூம் காணொலி  செயலி மூலமாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ராகுல் காந்தி கூறியதாவது:-  நமது மக்களுக்கு இப்போது பணம் தேவை.  எனவே, பிரதமர் மோடி, தான் அறிவித்த பொருளாதார தொகுப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நேரடியாகப் பணத்தை செலுத்துவது குறித்து பிரதமர் மோடி சிந்திக்க வேண்டும்.  

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 200 நாட்கள் வேலை அளிக்க வேண்டும். விவசாயிகளுக்குப் பணம் செலுத்த வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம்.   சாலைகளில் நடந்து செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குப் பணம் தேவை.  நலிவடைந்து இருக்கும் விவசாயிகளுக்கும் பணம் தேவை. அவர்களுக்குக் கடன் தேவை இல்லை” என்றார். 

Next Story