கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் குட்டி பாம்புகள்... அச்சத்தில் கிராம மக்கள்


கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் குட்டி பாம்புகள்... அச்சத்தில் கிராம மக்கள்
x
தினத்தந்தி 21 May 2020 10:23 AM GMT (Updated: 21 May 2020 12:29 PM GMT)

மத்திய பிரதேசத்தில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் குட்டி பாம்புகளால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

போபால்

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள்.... பாம்பு படையை கண்டால்...

மத்தியப்பிரதேச மாநிலத்தின் பிந்த் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்த வருகிறார் ஜீவன் சிங் குஷ்வா. இவரது வீட்டில் கடந்த வாரம் சில பாம்பு குட்டிகள் தென்பட்டுள்ளன. இதனைக்கண்டு அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அங்கிருந்து அந்தப் பாம்புகளை வெளியேற்றியுள்ளனர். ஆனால், அடுத்தடுத்த நாட்களிலும் வீட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சாரை சாரையாகப் பாம்புகள் படையெடுத்துள்ளன.

இதனால் செய்வதறியாது திகைத்த ஜீவன் சிங், தனது குடும்பத்தில் உள்ள நபர்களை வேறு ஊரில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார்.

பாம்புகள் படையெடுப்பு குறையாத நிலையில், கடந்த ஒருவாரத்தில் சுமார் 123 விஷப்பாம்புகள் அவரது வீட்டிற்கு வந்துள்ளன. இவை அனைத்தும் குட்டிகளாக இருப்பதனால், ஜீவன் சிங்கின் வீட்டின் எதாவது ஒரு பகுதியில் பாம்பு முட்டையிட்டுச் சென்றிருக்கலாம் அதன் காரணமாகவே அடுத்தடுத்து இவ்வளவு பாம்புக் குட்டிகள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வனத்துறையினர் பாம்பு முட்டையிடும் இடங்களை கண்டறிவதில் தீவிரமாக உள்ளனர்.

ஆனாலும் பாம்புகளின் இந்தத் தொடர் படையெடுப்பைக் கெட்ட சகுனமாகக் கருதும் அக்கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதனையடுத்து அங்கு பாம்பு பிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

என் வீட்டிற்குள் குட்டிபாம்புகளும் வெளியே கொரோனா வைரஸும் உள்ளன. நான் எங்கேசெல்வேன்?" எனது குடும்பம் இப்போது ஒரு வாரத்திற்கும் மேலாக சரியாக தூங்கவில்லை என குஷ்வா கூறி உள்ளார்.

Next Story