டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த மத்திய மந்திரி சதானந்தகவுடா நேராக வீட்டிற்கு சென்றதால் சர்ச்சை


டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த மத்திய மந்திரி சதானந்தகவுடா நேராக வீட்டிற்கு சென்றதால் சர்ச்சை
x
தினத்தந்தி 25 May 2020 9:30 PM GMT (Updated: 25 May 2020 9:22 PM GMT)

டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த மத்திய மந்திரி சதானந்தகவுடா நேராக வீட்டிற்கு சென்றதால் சர்ச்சை எழுந்துள்ளது.

பெங்களூரு, 

நாடு முழுவதும் நேற்று உள்நாட்டு விமான சேவை தொடங்கி உள்ளது. பெங்களூரு விமான நிலையத்திற்கு விமானங்களில் வந்தவர்களை அதிகாரிகள் அழைத்து சென்று ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் தனிமை கண்காணிப்பில் தங்க வைத்தனர். ஆனால் டெல்லியில் இருந்து விமானத்தில் வந்த பயணிகள் சிலர், ஓட்டலுக்கு செல்ல மாட்டோம் என்றும், தங்களை 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே டெல்லியில் இருந்து மற்ற பயணிகளுடன் வந்த மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரியான சதானந்தகவுடா காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இதை பார்த்த மற்ற பயணிகள், அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்கள். அதோடு சதானந்தகவுடாவை தனிமைப்படுத்தாதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இதுகுறித்து மத்திய மந்திரி சதானந்தகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

“மத்திய மந்திரியாக இருக்கும் நான் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறேன். பெங்களூருவில் அதிகாரிகளுடன் ஒரு முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால் சக பயணிகளுடன் விமானத்தில் வந்துள்ளேன். நான் ஒரு மத்திய மந்திரி என்பதால், கொரோனா தொடர்பான விதிமுறைகளில் எனக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே என்னை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story