காஷ்மீர் எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் விடிய, விடிய தாக்குதல்


காஷ்மீர் எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் விடிய, விடிய தாக்குதல்
x
தினத்தந்தி 1 Jun 2020 5:19 AM IST (Updated: 1 Jun 2020 5:19 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் விடிய, விடிய தாக்குதல் நடத்தியது.

ஸ்ரீநகர், 

காஷ்மீரில் அத்துமீறலில் ஈடுபடும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் எல்லையில் தாக்குதல் நடத்துவதை தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றனர். அந்த வகையில் அங்குள்ள பூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட் மற்றும் மெந்தர் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதிகளில் அமைந்துள்ள கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தாக்குதல் நடத்த தொடங்கினர். துப்பாக்கி மற்றும் சிறிய ரக பீரங்கிகள் மூலம் நேற்று காலை சுமார் 5 மணி வரை தாக்குதலில் ஈடுபட்ட அவர்களுக்கு, இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

விடிய, விடிய நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் எல்லையோர கிராமங்களில் உள்ள பல வீடுகள் சேதமடைந்தன. சண்டையின்போது கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களிலும், பதுங்கு குழிகளிலும் சென்று மறைந்து கொண்டனர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் இந்த அத்துமீறிய தாக்குதலில் அங்கு வசிக்கும் முகமது யாசிர் (வயது 25) என்பவர் காயம் அடைந்தார். இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Next Story