50 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கான திட்டம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்


50 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கான திட்டம்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்
x
தினத்தந்தி 1 Jun 2020 11:00 PM GMT (Updated: 1 Jun 2020 11:00 PM GMT)

50 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு பலனளிக்கும் புதிய திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

புதுடெல்லி, 

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 50 லட்சத்துக்கு மேற்பட்ட சாலையோர, நடைபாதை வியாபாரிகளுக்கு பலனளிக்கும் புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதற்கு ‘பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பார் நிதி‘ திட்டம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன்படி, மேற்கண்ட வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சம்வரை கடன் வழங்கப்படும். அதை ஓராண்டுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். அபராத நடவடிக்கை கிடையாது.

“சுதந்திரத்துக்கு பிறகு சாலையோர வியாபாரிகளுக்காக இத்தகைய திட்டம் கொண்டுவரப்படுவது இதுவே முதல்முறை“ என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மேலும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ரூ.20 ஆயிரம் கோடி தொகுப்பு திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் இறுதி செய்யப்பட்டது.

நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறை மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.50 கோடிவரை முதலீடும், ரூ.250 கோடிவரை விற்றுமுதலும் கொண்டவை நடுத்தர நிறுவனங்களாக கருதப்படும்.

2020-2021 சாகுபடி ஆண்டில், நெல், பருத்தி, பருப்பு, எண்ணெய் வித்துகள், தானியங்களின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

அதன்படி, சாதாரண ரக நெல் மற்றும் கிரேடு ஏ ரக நெல்லின் ஆதார விலை குவிண்டாலுக்கு தலா 53 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பருத்திக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.260 உயர்த்தப்பட்டது.


Next Story