வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா-அமெரிக்கா இடையே 36 விமானங்கள் இயக்கப்படும் - ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு


வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா-அமெரிக்கா இடையே 36 விமானங்கள் இயக்கப்படும் - ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 July 2020 4:31 PM GMT (Updated: 5 July 2020 4:31 PM GMT)

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா-அமெரிக்கா இடையே 36 விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்திருந்தது. 

மேலும் வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சிறப்பு விமானங்களுக்கும், சரக்கு சேவை விமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வரும் 11 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை இந்தியா - அமெரிக்கா இடையே 36 விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 4 வது கட்டமாக இந்தியா, அமெரிக்காவுக்கு விமான சேவையை மீண்டும் செயல்படுத்துகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு ஏர் இந்தியா இணையதளத்தில் ஜூலை 6 இரவு 8 மணி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று  நியூயார்க்கில் ஜூலை 6 அன்று காலை 10.30 மணிக்கும், சிக்காகோவில் காலை 9.30 மணிக்கும், சான் பிரான்சிஸ்கோவில் காலை 7.30 மணிக்கும் முன்பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு வழித்தடத்திலும் சேர்த்து மொத்தம் 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




Next Story