கர்நாடகாவில் கொரோனா சமூக பரவல் தொடங்கிவிட்டது: மந்திரி ஜேசி மதுசாமி கவலை


கர்நாடகாவில்  கொரோனா சமூக பரவல் தொடங்கிவிட்டது: மந்திரி ஜேசி மதுசாமி கவலை
x
தினத்தந்தி 7 July 2020 6:26 AM GMT (Updated: 7 July 2020 6:26 AM GMT)

கர்நாடகாவில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது என்று அம்மாநில மந்திரி மதுசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக வேகமெடுத்து வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கர்நாடகாவில் 1,843 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகாவில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது என்று மாநில மந்திரி மதுசாமி தெரிவித்துள்ளார்.  

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மந்திரி மதுசாமி கூறுகையில், “துமாகூரில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா வைரஸ் சமூக பரவலாக உருவெடுத்துள்ளதால் நாங்கள் கவலை அடைந்துள்ளோம். அதை கட்டுப்படுத்த முயற்சித்தாலும், மாவட்ட அதிகாரிகளுக்கு அது கடினமான கட்டத்தை எட்டியுள்ளது” என்றார்.

முன்னதாக, மாநில முதல் மந்திரி எடியூரப்பா, கர்நாடகாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்று கூறிய நிலையில், மந்திரி மதுசாமி முரண்பட்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

Next Story