லடாக்கின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியை மீண்டும் இந்தியா துவங்க இருப்பதாக தகவல்


லடாக்கின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியை மீண்டும் இந்தியா துவங்க இருப்பதாக தகவல்
x
தினத்தந்தி 10 July 2020 3:27 AM GMT (Updated: 10 July 2020 3:27 AM GMT)

பதற்றம் தணிந்த பிறகு லடாக்கின் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியை மீண்டும் இந்தியா துவங்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீநகர்,

கிழக்கு லடாக்கில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த மாதம் 15-ந்தேதி இரு நாட்டு வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனாவின் 35 வீரர்களும் உயிரிழந்தனர். இதனால் இருநாட்டு எல்லையில் இரு தரப்பும் படைகளை குவித்ததுடன், எல்லை முழுவதும் போர் மேகமும் சூழ்ந்தது.

இதைத்தொடர்ந்து எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்த இரு தரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. அதன்படி இரு நாட்டு ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் இருநாட்டு எல்லை பேச்சுவார்த்தையின் சிறப்பு பிரதிநிதிகளான இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோர் கடந்த 5-ந்தேதி சுமார் 2 மணி நேரம் தொலைபேசியில் பேசினர்.

இதில் எல்லையில் பதற்றத்தை தணிக்க சுமுக முடிவு எடுக்கப்பட்டது. மேலும் பதற்றம் நிறைந்த பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை வாபஸ் பெறுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி கடந்த 6-ந்தேதி காலை முதல் கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து இந்திய, சீன படைகள் வெளியேறி வருகின்றன. குறிப்பாக மோதல் நிகழ்ந்த கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிக்ங், கோக்ரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகள் வெளியேறி வருவதுடன், அங்கு நிறுவிய கட்டுமானங்களையும் அகற்றி வருகின்றனர். இந்த படை விலக்கும் நடவடிக்கைகளை சீனாவும் நேற்று உறுதி செய்தது.

இந்நிலையில்,  ஃபிங்கர்ஸ் மலைத் தொடர்களில் இந்தியா மீண்டும் தனது ரோந்து பணியை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. "ரோந்துப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன, ஆனால் பதட்டமான நிலைமை தொடர்ந்து சீரடைந்து வருவதால் மீண்டும் நம்முடைய எல்லை நிலவரங்களை நேரடியாக சென்று ஆய்வு செய்வோம்” என அரசு தரப்பு வட்டாரங்கள் கூறியதாக பிரபல ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

Next Story