இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.72%; மத்திய மந்திரி ஹர்ச வர்தன் அறிவிப்பு


இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.72%; மத்திய மந்திரி ஹர்ச வர்தன் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 July 2020 9:05 AM GMT (Updated: 10 July 2020 9:05 AM GMT)

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.72% ஆக உள்ளது என மத்திய மந்திரி ஹர்ச வர்தன் அறிவித்துள்ளார்.


புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவுக்கு 7.93 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்ச எண்ணிக்கையாக 26,506 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  475 பேர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21,604 ஆக உயர்வடைந்து உள்ளது.

நாடு முழுவதுமுள்ள 1,115 பரிசோதனை மையங்களில் தொடர்ச்சியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்ததில், கொரோனா பாதிப்பு பரிசோதனை எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் டெல்லி, குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் குணமடைந்தோர் விகிதம் ஆனது, தேசிய சராசரி குணமடைந்தோர் விகிதத்திற்கும் கூடுதலாக உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில், கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு குணமடைந்தவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இது கடந்த 7ந்தேதி 61.13% ஆக உயர்வடைந்து இருந்தது.  இந்த விகிதம் கடந்த 8ந்தேதி 61.53% ஆகவும், நேற்று 62.09% ஆகவும் உயர்ந்திருந்தது.

இந்தியாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.  சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை 1.75 முறை அதிகம் ஆக உள்ளது.  4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை குணமடைந்து உள்ளனர்.

தொடர்ந்து குணமடைந்தோரின் விகிதம் நாட்டில் அதிகரித்து வருகிறது.  இதுபற்றி மத்திய சுகாதார துறை மந்திரி ஹர்ச வர்தன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு குணமடைந்தவர்களின் விகிதம் 63% ஆக உள்ளது.  இறப்பு விகிதம் 2.72% ஆக உள்ளது.  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை.  பரிசோதனைகளை நாம் அதிகரித்து வருகிறோம்.  அதனால் அதிக அளவிலான பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன.  அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

நாளொன்றுக்கு நாங்கள் 2.7 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்கிறோம்.  பெரிய நாடாக இருந்தபொழுதும், சமூக பரவல் நிலையை நாம் அடையவில்லை.  ஒரு சில இடங்களிலேயே பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Next Story