இந்தியாவில் கொரோனா பாதிப்பு குணமடைந்தோர் விகிதம் 62.93% ஆக உயர்வு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு குணமடைந்தோர் விகிதம் 62.93% ஆக உயர்வு
x
தினத்தந்தி 12 July 2020 3:09 PM GMT (Updated: 12 July 2020 3:09 PM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 62.93% ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவுக்கு 8 லட்சத்து 49 ஆயிரத்து 553 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,674 ஆக உயர்வடைந்து உள்ளது.  இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,92,258 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 19,235 பேர் குணமடைந்துள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,34,620 ஆக உயர்வடைந்து உள்ளது.  இதனால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட, குணமடைந்தோர் எண்ணிக்கை 2,42,362 கூடுதலாக உயர்வடைந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதுமுள்ள 1,115 பரிசோதனை மையங்களில் தொடர்ச்சியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  நாளொன்றுக்கு 2.8 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.  இந்தியாவில், கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு குணமடைந்தவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது கடந்த 7ந்தேதி 61.13% ஆக உயர்வடைந்து இருந்தது.  இந்த விகிதம் கடந்த 8ந்தேதி 61.53% ஆகவும், கடந்த 9ந்தேதி 62.09% ஆகவும் உயர்ந்திருந்தது.  இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 62.93% ஆக இன்று உயர்வடைந்துள்ளது.

Next Story