30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சச்சின் பைலட் அறிவிப்பு - ராஜஸ்தான் அரசுக்கு சிக்கல்


30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சச்சின் பைலட் அறிவிப்பு - ராஜஸ்தான் அரசுக்கு சிக்கல்
x
தினத்தந்தி 12 July 2020 10:45 PM GMT (Updated: 12 July 2020 8:09 PM GMT)

முதல்-மந்திரி அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 30 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக சச்சின் பைலட் அறிவித்துள்ளதால், ராஜஸ்தான் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர், 

ராஜஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தபோதே முதல்-மந்திரி பதவியை பெறுவதற்கு முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையே போட்டி நிலவியது. பின்னர் கட்சி மேலிடம் தலையிட்டு அசோக் கெலாட்டுக்கு முதல்-மந்திரி பதவியையும், சச்சின் பைலட்டுக்கு துணை முதல்-மந்திரி பதவியையும் வழங்கியது. அப்போது இந்த மோதல் முடிவுக்கு வந்தாலும், இருவரும் தாமரை இலைமேல் தண்ணீர் போல ஒட்டாமலேயே இருந்து வந்தனர்.

தற்போது அங்கு ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி உள்ளிட்டோருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இந்த விவகாரம் சச்சின் பைலட்டுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் பகிரங்கமாக மோதலை தொடங்கி உள்ளார்.

டெல்லி சென்றிருந்த அவர் நேற்று ராஜஸ்தான் திரும்பினார். உடனேயே தனக்கு 30 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக வாட்ஸ்அப் குழுவில் அறிவித்தார். மேலும் அசோக் கெலாட் அரசு தற்போது பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும், நாளை (இன்று) நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன் எனவும் அறிவித்தார். இதன் மூலம், ராஜஸ்தான் அரசில் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி இடையேயான மோதல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இவ்வாறு அசோக் கெலாட்-சச்சின் பைலட் இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதல் மாநில அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Next Story