தங்க கடத்தல்; பெண் உள்பட 2 குற்றவாளிகளுடன் சிவசங்கர் தொலைபேசி உரையாடல்


தங்க கடத்தல்; பெண் உள்பட 2 குற்றவாளிகளுடன் சிவசங்கர் தொலைபேசி உரையாடல்
x
தினத்தந்தி 14 July 2020 2:35 PM GMT (Updated: 14 July 2020 2:35 PM GMT)

தங்க கடத்தல் விவகாரத்தில் பெண் உள்பட 2 குற்றவாளிகளுடன் சிவசங்கர் தொலைபேசி வழியே பேசியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவு பொருட்கள் என்ற பெயரில் தங்கம் கடத்தப்படுகிறது என ரகசிய தகவல் கிடைத்தது.  தொடர்ந்து, திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த பார்சலை சோதனையிட்டதில், ரூ.15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்பு துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேசுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக, இவர் அமீரக நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.  அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

முதல் மந்திரி பினராயி விஜயனின் தலைமை செயலர் எம். சிவசங்கர்தான் கேரள தகவல் தொடர்பு துறைக்கும் செயலர். இதனால், அவரிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.  ஸ்வப்னாவை சிவசங்கர்தான் பதவியில் நியமனம் செய்துள்ளார் என்றும் புகார் எழுந்தது.

ஆனால், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஸ்வப்னாவின் நியமனம் குறித்து தனக்கு தெரியாது என விளக்கமளித்துள்ளார்.  இந்த நிலையில், எம்.சிவசங்கரின் தலைமை செயலர் பதவி பறிக்கப்பட்டது.  இவருக்கு பதிலாக மீர் முகமது  நியமிக்கப்பட்டார்.  தொடர்ந்து மற்றொரு அதிரடியாக சிவசங்கரிடம் இருந்து ஐ.டி. செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.  அவருக்கு பதிலாக முகமது ஒய். சபீருல்லா ஐ.டி. பிரிவு புதிய செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் மத்திய அரசு தலையிட்டு தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதுபற்றி முதல் மந்திரி விஜயன் இன்று கூறும்பொழுது, கேரள முன்னாள் தலைமை செயலாளர் எம். சிவசங்கர் ஒரு பெண் உள்பட 2 குற்றவாளிகளுடன் தொலைபேசி வழியே உரையாடிய விவரங்கள் வெளியாகி உள்ளன.  இந்த தகவலின் அடிப்படையில், தலைமை செயலகம் புதிய விசாரணையை தொடங்கும்.

புலனாய்வு அமைப்பு விசாரணையும் தொடரும்.  அவர் குற்றவாளி என கண்டுபிடிக்கப்பட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும்.  இதற்காக தலைமை செயலாளர் தலைமையிலான குழு ஒன்று விசாரணை நடத்தி வருகிறது.  அதன் அறிக்கை கிடைத்த பின் அரசு முறையான நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளார்.

Next Story