அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை தொடங்கியது - பிரதமர் மோடி பங்கேற்பு


அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை தொடங்கியது -  பிரதமர் மோடி பங்கேற்பு
x
தினத்தந்தி 5 Aug 2020 6:47 AM GMT (Updated: 5 Aug 2020 7:26 AM GMT)

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்று வருகிறது.

அயோத்தி,

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராம ஜென்ம பூமியில் 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கல்லை அடிக்கல் நாட்டுகிறார்.  கொரோனா அச்சுறுத்தலால் முக்கிய பிரபலங்கள், சாமியார்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

அடிக்கல் நாட்டு விழாவிற்காக இன்று காலை ஹெலிகாப்டர் மூலமாக அயோத்தி வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  தனிமனித இடைவெளியுடன் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.  

அயோத்தி வந்த பிரதமர் மோடி, அங்குள்ள ஹனுமன் கோவிலில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமரை வழிபட்ட பிரதமர் மோடி, பூஜைகளையும் செய்தார். பின்னர், கோவில் வளாகத்தில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டு வைத்தார்.

இதையடுத்து, பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வருகை தந்தனர். தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை தொடங்கியது. இதில், மாஸ்க் அணிந்த படி பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Next Story