நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்


நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி மாநிலங்கள் தாக்கல் செய்த  மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 4 Sep 2020 9:22 AM GMT (Updated: 4 Sep 2020 9:22 AM GMT)

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

புதுடெல்லி,

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்காக ‘நீட்’ மற்றும் ‘ஜே.இ.இ.’ தேர்வுகளை நடத்த அனுமதித்து கடந்த மாதம் 17-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதன்படி ‘நீட்’ தேர்வு வரும் 13-ந்தேதி நடக்கிறது. ‘ஜே.இ.இ.’ தேர்வு கடந்த 1-ந்தேதி தொடங்கியது. 6-ந்தேதி முடிகிறது.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு கோரி எதிர்க்கட்சிகள் ஆளுகிற மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ராஜஸ்தான், சத்தீஷ்கார், பஞ்சாப், மராட்டியம் ஆகிய 6 மாநிலங்களின் மந்திரிகள் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், “கொரோனா காலத்தில் மாணவர்கள் வாழ்வதற்கான உரிமையை சுப்ரீம் கோர்ட்டு பாதுகாக்க தவறி விட்டது, தேர்வுகளை நடத்துவதில் உள்ள சிக்கல்களை புறக்கணித்து விட்டது” என கூறப்பட்டுள்ளது.

இந்த மறு ஆய்வு மனு  சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அசோக் பூஷண், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோரை கொண்ட அமர்வு முன் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், நீட் தேர்வு  திட்டமிட்டபடி நடைபெறும் எனத்தெரிகிறது.


Next Story