உலகிலேயே டெல்லியில் தான் அதிக கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது - முதல்வர் கெஜ்ரிவால்


உலகிலேயே டெல்லியில் தான் அதிக கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது - முதல்வர் கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 15 Sep 2020 4:27 PM GMT (Updated: 15 Sep 2020 4:27 PM GMT)

உலகிலேயே அதிக கொரோனா பரிசோதனைகள் டெல்லியில் தான் செய்யப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் முதலில் அதிகரித்து, பின்னர் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன.

இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உலகிலேயே அதிக கொரோனா பரிசோதனைகள் டெல்லியில் தான் செய்யப்படுவதாக தெரிவித்தார். இதுவரை 21 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், இது டெல்லியின் மொத்த மக்கள் தொகையில் 11 சதவீதம் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இது குறித்து முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது;-

“கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான வழிகளை இந்த உலகிற்கு டெல்லி காட்டியிருக்கிறது. தினந்தோறும் டெல்லியில் 60,000 பேருக்கு மேல் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. டெல்லியின் மொத்த மக்கள் தொகை 2 கோடியாகும். ஒவ்வொரு பத்து லட்சம் பேரில் 3,000 பேர் என்ற விகிதத்தில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இது இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் மிக அதிகமான எண்ணிக்கை ஆகும். அந்த வகையில் டெல்லியில் தான் உலகிலேயே அதிக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

Next Story