ரஷியாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம்


ரஷியாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசி தயாரிக்க இந்திய நிறுவனம் ஒப்பந்தம்
x
தினத்தந்தி 16 Sep 2020 5:54 PM GMT (Updated: 16 Sep 2020 5:54 PM GMT)

இந்தியாவுக்கு 10 கோடி டோஸ் தடுப்பூசிகளை ரஷ்யா விற்பனை செய்ய உள்ளது.

புதுடெல்லி,

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் பல நாடுகள் கணிசமான வெற்றியையும் பெற்று தடுப்பூசி தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

அந்த வகையில் ரஷியாவின் கமாலயா நிறுவனம் ‘ஸ்புட்னிக் 5’ என்ற தடுப்பூசியை தயாரித்து உள்ளது. 3-வது கட்ட மனித பரிசோதனைக்கு தயாராகி வரும் இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசின் தேசிய கொரோனா தடுப்பூசி நிபுணர் குழு தலைவரும், நிதி ஆயோக் உறுப்பினருமான டாக்டர் வி.கே.பால் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, இந்த தடுப்பூசி தற்போது ரஷியாவில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து உள்ளது.

இந்தத் தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதனை செய்து, தயாரிப்பது தொடர்பாக, மத்திய அரசுடன், ரஷ்ய அரசு பேச்சு நடத்தி வந்தது. இந்நிலையில்,  ரஷிய நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்.டி.ஐ.எஃப்) , மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி விநியோகத்திற்கு இந்திய நிறுவனத்துடன் ஒத்துழைக்க ஒப்புக் கொண்டதாக கூறி உள்ளது. 

.இந்தியாவைச் சேர்ந்த, டாக்டர் ரெட்டிஸ் லேபாரடீஸ் என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், இந்த தடுப்பூசியை பரிசோதனை செய்ய மற்றும் தயாரிக்க முன் வந்துள்ளது. இந்த நிறுவனம், 10 கோடி தடுப்பூசிகளை தயாரிக்கும். இது தொடர்பான ஒப்புதல்கள் பெறுவதற்கான நடவடிக்கை களை நடந்து வருகின்றன.

Next Story