ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்: வங்கி சட்ட மசோதா, மக்களவையில் நிறைவேறியது


ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்: வங்கி சட்ட மசோதா, மக்களவையில் நிறைவேறியது
x
தினத்தந்தி 16 Sep 2020 9:24 PM GMT (Updated: 16 Sep 2020 9:24 PM GMT)

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வரும் வங்கி சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது.

புதுடெல்லி, 

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் மத்திய அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது. அந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக நாடாளுமன்ற மக்களவையில் 2020-ம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறை (திருத்த) மசோதா, சில தினங்களுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது.இந்த மசோதாவை நகர்த்தி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பேசினார்.

அப்போது அவர், “வங்கி ஒழுங்குமுறை சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவதின் நோக்கம், கூட்டுறவு வங்கி நிர்வாகங்களை மேம்படுத்தவும், டெபாசிட் தாரர்களின் பணத்தை பாதுகாப்பதும்தான். கூட்டுறவு வங்கிகளின் நிலை மிக மோசமானதால்தான், ஊரடங்கு காலத்தில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டிய கட்டாய நிலை அரசுக்கு ஏற்பட்டது” என கூறினார்.

இந்த திருத்தங்கள் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் அல்லது கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தாது. வங்கி பணியில் ஈடுபடும் கூட்டுறவு சங்கங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி, தி.மு.க. எம்.பி. செந்தில்குமார், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் உள்ளிட்டோர் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முடிவில் விவாதத்துக்கு பதில் அளித்தும், மசோதாவை நியாயப்படுத்தியும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார். அதை தொடர்ந்து மசோதா நிறைவேறியது.

Next Story