கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு முன் எல்லையில் பல முறை ஊடுருவ முயன்றது சீன ராணுவம்; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்


கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு முன் எல்லையில் பல முறை ஊடுருவ முயன்றது சீன ராணுவம்; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 17 Sep 2020 9:38 AM GMT (Updated: 17 Sep 2020 9:38 AM GMT)

கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு முன் எல்லை பகுதியில் கடந்த மே மாதம் பல முறை சீன ராணுவம் ஊடுருவ முயன்றது என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் மேலவையில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேலவையில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பேசும்பொழுது, கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கிழக்கு லடாக்கையொட்டிய இந்திய எல்லை பகுதிகளில் சீன தரப்பில் இருந்து அந்நாட்டு ராணுவ படைகள் ஊடுருவல் முயற்சிகளை செயல்படுத்த தொடங்கின.

இதன் ஒரு பகுதியாக, கடந்த மே மாத தொடக்கத்தில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் வழக்கம்போல், மரபு சார்ந்த ரோந்து பணியை மேற்கொண்டிருந்த நமது படைகளை தடுக்கும் முயற்சியில் சீன ராணுவம் ஈடுபட்டது.  இது இருதரப்பிலும் மோதல் போக்கை உருவாக்கியது.

நமது இருதரப்பு நாடுகளின் ஒப்பந்தங்கள் மற்றும் விதிகளின்படி, தளபதிகள் அளவில் இந்த சூழல் பற்றி பேசப்பட்ட நிலையில், கடந்த மே மாத மத்தியில், மேற்கு பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன படைகள் பல முறை அத்துமீறி ஊடுருவும் முயற்சியில் ஈடுபட்டன.   எனினும் சீனாவின் இந்த முயற்சிகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து, நமது படைகள் அதற்கு சரியான முறையில் பதிலடி அளித்தனர் என கூறியுள்ளார். 

தொடர்ந்து சிங் பேசும்பொழுது, படைகளை வாபஸ் பெறுவது என்று சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் மூத்த தளபதிகள் மட்டத்திலான இருதரப்பு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவை சீனா மீறியதன் விளைவாகவே, கல்வான் பள்ளத்தாக்கு மோதல் ஏற்பட்டது என்று மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளார்.

Next Story