மராட்டியத்தில் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது நாடு முழுவதும் மேலும் 96 ஆயிரம் பேருக்கு தொற்று


மராட்டியத்தில் சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது நாடு முழுவதும் மேலும் 96 ஆயிரம் பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 18 Sep 2020 10:22 PM GMT (Updated: 18 Sep 2020 10:22 PM GMT)

நாடு முழுவதும் 96 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கும் நிலையில், மராட்டியத்தில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து விட்டது.

புதுடெல்லி,

அகில உலகையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா எனும் பெருந்தொற்று ஏழை-பணக்காரன் என்ற எந்தவித பேதமும் இன்றி அனைத்து தரப்பினரையும் தனது மாய வலைக்குள் வீழ்த்தி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் கொரோனாவிடம் விரைவாக சிக்கி வருகின்றனர்.

இதில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் தினந்தோறும் கொரோனாவுக்கு தங்கள் உயிரை காவு கொடுத்து வருகின்றனர். கடந்த 9 மாதங்களாக உலகம் முழுவதும் இதுதான் அன்றாட செய்தியாகி வருகிறது. இந்த கண்ணுக்கு தெரியாத அரக்கனிடம் சிக்கியவர்களின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் இந்தியா இருப்பதுதான் மிகுந்த சோகத்தை கொடுத்திருக்கிறது.

இங்கு நாள்தோறும் புதிதாக பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னணியில் நீடிக்கிறது.

நாடு முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்து 424 ஆகும். இது மொத்த எண்ணிக்கையை 52 லட்சத்து 14 ஆயிரத்து 678 ஆக உயர்த்தி இருக்கிறது. இப்படி தினமும் சுமார் 1 லட்சம் பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி வருவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் 1,174 பேர் கொரோனாவுக்கு தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை கொரோனா காவு கொண்ட உயிர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 372 ஆகி விட்டது. எனினும் இந்தியாவின் கொரோனா சாவு விகிதம் 1.62 என்ற அளவில்தான் உள்ளது. இது பிற உலக நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும்.

மறுபுறம் இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மேற்படி 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக நாடு முழுவதும் 87 ஆயிரத்து 472 பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பி உள்ளனர்.

இவ்வாறு கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 41 லட்சத்து 12 ஆயிரத்து 552 ஆகி விட்டது. இது 78.86 சதவீதமாகும். இந்தியாவில் கடந்த 11 நாட்களாக தினமும் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 10 லட்சத்து 17 ஆயிரத்து 754 பேர் ஆகும். இது மொத்த எண்ணிக்கையில் 19.52 சதவீதம் ஆகும். சிகிச்சையில் இருப்போரை விட 4.04 மடங்கு அதிகமானோர் தொற்றை வென்றுள்ளனர்.

சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளை பொறுத்தவரை மராட்டிய மாநிலம் அதிக அளவிலான நோயாளிகளை கொண்டிருக்கிறது. அங்கு சிகிச்சையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 2 ஆயிரத்து 135 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை, மீண்டவர் எண்ணிக்கை என அனைத்திலும் மராட்டியமே முதலிடத்தில் இருக்கிறது.

அதேநேரம் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையில் 59.8 சதவீதத்தினர் மராட்டியம், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதைப்போல மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கையிலும் 59.3 சதவீதத்தினர் இந்த மாநிலங்களையே சார்ந்தவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

மேலும் புதிதாக குணமடைந்தவர்களில் மராட்டியம் (22.31 சதவீதம்), ஆந்திரா (12.24), கர்நாடகா (8.3), தமிழ்நாடு (6.31), சத்தீஷ்கார் (6) என மொத்தம் 55.1 சதவீதத்தினர் இந்த 5 மாநிலங்ளை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதற்கிடையே மேற்படி 24 மணி நேரத்தில் மட்டும் 10 லட்சத்து 6 ஆயிரத்து 615 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 6 கோடியே 15 லட்சத்து 72 ஆயிரத்து 343 ஆக அதிகரித்து இருக்கிறது.

Next Story