ஹத்ராஸ் கற்பழிப்பு சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன - பா.ஜனதா குற்றச்சாட்டு


ஹத்ராஸ் கற்பழிப்பு சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன - பா.ஜனதா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 Oct 2020 1:20 AM GMT (Updated: 5 Oct 2020 1:20 AM GMT)

ஹத்ராஸ் கற்பழிப்பு சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

மும்பை, 

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. 

இந்தநிலையில்  இந்த விவகாரம் குறித்து பாரதீய ஜனதாவை சேர்ந்த சட்டமேல் அவை எதிர்க்கட்சி தலைவர் பிரவீன் தாரேகர் கூறியதாவது:-

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் தலித் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் ஆகியோர் அரசியல் செய்கின்றனர். ஆனால் அவர்கள் 2 பேரும் மராட்டியத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரிப்பதை பற்றி பேசுவதை தவிர்க்கின்றனர். 

இந்த விவகாரத்தில் அவர்கள் மவுனம் காப்பது ஏன்? சஞ்சய் ராவுத் மராட்டியத்தில் நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்கள் பற்றி பேச வேண்டும். யோகி அரசு அந்த விவகாரத்திலும் தோல்வி அடையவில்லை. எதிர்க்கட்சிகள் தான் அரசியல் செய்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story