ஹத்ராஸ் வழக்கு; கைது செய்யப்பட்ட 4 பேரின் உறவினர்களிடம் சி.பி.ஐ. விசாரணை


ஹத்ராஸ் வழக்கு; கைது செய்யப்பட்ட 4 பேரின் உறவினர்களிடம் சி.பி.ஐ. விசாரணை
x
தினத்தந்தி 15 Oct 2020 12:26 PM GMT (Updated: 15 Oct 2020 12:26 PM GMT)

ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரின் உறவினர்களிடம் சி.பி.ஐ. இன்று விசாரணையை தொடங்கியுள்ளது.

ஹத்ராஸ்,

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பட்டியல் இன இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 
உயிரிழந்த பெண்ணின் உடலை நள்ளிரவில் குடும்பத்தினரை அனுமதிக்காமல் தகனம் செய்தது,  முதல் தகவல் அறிக்கையில் அடையாளம் தெரியாத நபர்கள் என வழக்குப்பதிவு செய்தது என உ.பி. போலீசார் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனங்களை சந்தித்தது.

அந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு அரசியல் கட்சிகளும், மகளிர் அமைப்புகளும் போராட்டம் நடத்தினர். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்கள் அலிகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

இந்த சம்பவத்தில் இளம்பெண்ணின் தந்தை மற்றும் 2 சகோதரர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை பலத்த பாதுகாப்புடன் சி.பி.ஐ. அலுவலக முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோன்று சி.பி.ஐ. குழுவுக்கு தலைமை வகிக்கும் சீமா பகுஜா, கடந்த செவ்வாய் அன்று பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தில் உள்ள பெண் உறவினர்களை சந்தித்துள்ளார்.

ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் பலாத்கார சம்பவத்தில் 4 குற்றவாளிகளின் உறவினர்களிடம் சி.பி.ஐ. இன்று விசாரணையை தொடங்கியுள்ளது.  இதனை முன்னிட்டு உறவினர்களின் வீடுகளில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டு இருந்தது.  ஹத்ராசில் உள்ள கிராமத்திற்கு செல்வதற்கு முன், சி.பி.ஐ. அதிகாரிகள் 2 பேர் சந்தப்பா காவல் நிலையத்திற்கு சென்றனர்.

இவர்களில் லவ்குஷ் சிகார்வர் என்பவரின் உறவினர்களிடம் 3 மணிநேரத்திற்கும் மேலாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டது.

Next Story