இந்தியாவில் டிசம்பரில் 30 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி தயார்-பிரபல மருந்து நிறுவனம் அறிவிப்பு


இந்தியாவில் டிசம்பரில் 30 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி தயார்-பிரபல மருந்து நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2020 11:30 PM GMT (Updated: 17 Oct 2020 9:22 PM GMT)

இந்தியாவில் டிசம்பரில் 30 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி தயாராகி விடும், மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்ததும் வெளியீடு தொடங்கி விடும் என்று பிரபல மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.

புனே, 

இந்தியாவில் டிசம்பரில் 30 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி தயாராகி விடும், மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்ததும் வெளியீடு தொடங்கி விடும் என்று பிரபல மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகாவும் கொரோனாவை தடுக்க கூட்டாக ‘கோவிஷீல்டு’ என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.

இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்தி, தடுப்பூசிகளை தயாரித்து வினியோகிக்க புனேயை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் பெற்றுள்ளது.இந்த தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைகள் மும்முரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனத்தின் செயல் இயக்குனர் டாக்டர் சுரேஷ் ஜாதவ், ஹீல் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட ‘பார்மா எக்சலன்ஸ்’ மின்னணு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்த தடுப்பூசி தொடர்பாக பல முக்கிய தகவல்களை அவர் வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

ஆண்டுக்கு 70 கோடி முதல் 80 கோடி ‘டோஸ்’ வரையில் தடுப்பூசியை உற்பத்தி செய்கிற ஆற்றல் சீரம் நிறுவனத்துக்கு இருக்கிறது என்று எங்கள் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா கூறி இருக்கிறார். சீரம் நிறுவனம், இன்னும் கூடுதலான ‘டோஸ்’ தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அதற்கு கொஞ்ச காலம் ஆகும்.

தடுப்பூசி உற்பத்தி செய்கிற 3 மருந்து நிறுவனங்களை பெற்றிருப்பது இந்தியாவின் அதிர்ஷ்டம். அவற்றில் இரண்டு நிறுவனங்கள், தடுப்பூசியின் 3-வது இறுதிக்கட்ட சோதனையை நடத்துகின்றன. எஞ்சிய ஒரு நிறுவனம், இரண்டாவது கட்ட பரிசோதனையை நடத்துகிறது.

எங்களது மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவுகள், டிசம்பர் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் கிடைத்து விடும். அதே சமயம், தரவுகள் தயாராகி விடும். அவை, உரிமம் பெறுவதற்காக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் வழங்கப்படும். பொதுவாக ஒரு தடுப்பூசி சந்தைக்கு வருவதற்கு 8 முதல் 10 ஆண்டுகள் வரையில் ஆகும். ஆனால், இது போன்ற தடுப்பூசி மிக சீக்கிரமாக தேவைப்படுவது இது மூன்றாவது முறை. ஏற்கனவே ‘எச்1என்1 புளூ’ (பன்றி காய்ச்சல்) வந்த போது தேவைப்பட்டது. இந்த பன்றி காய்ச்சல் 2009 ஜூன், ஜூலையில் மெக்சிகோவில் இருந்து வந்தது. அதற்கு பெரிய நிறுவன தடுப்பூசி அதே ஆண்டின் டிசம்பரில் வந்து விட்டது. காரணம், தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. எனவே அதன் நடைமுறைகள் மிகவேகமாக இருந்தது.

இரண்டாவது எபோலா வரைஸ் ஆப்பிரிக்காவில் வெடித்து, உலகின் பிற பகுதிகளுக்கு பரவியது. அதற்கான தடுப்பூசி, இரண்டாவது கட்ட மருத்துவ பரிசோதனையின்போது சந்தைக்கு வந்து விட்டது.

ஆனால் முதல் முறையாக கொரோனா வைரசை பற்றி உலகுக்கு எதுவும் தெரியாது. ஆனால் இந்த வைரஸ் உகானில் இருந்து வந்தபோது, அது எந்த வகையான நோயை ஏற்படுத்த போகிறது, அது மனிதர்களை எவ்வாறு பாதிக்கிறது, எவ்வாறு பரவுகிறது என்பதற்கு அதிர்ஷ்டவசமாக வழிமுறைகள் இருந்தன.

இந்தியாவில் டிசம்பர் இறுதியில் 20 கோடி முதல் 30 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி தயாராகி விடும். இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உரிமம் தந்தவுடன், தடுப்பூசி வெளியீட்டை தொடங்கி விடலாம்.

எல்லா அனுமதியையும் பெற்றுவிட்டால் மாதம் ஒன்றுக்கு 6 கோடி முதல் 7 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி உற்பத்தியை இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் மேற்கொள்ள முடியும். கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனையின் தரவுகளை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் டிசம்பர் இறுதிவாக்கில் எங்கள் நிறுவனம் அளித்து விட முடியும்.

அதில், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு திருப்தி அடைந்து விட்டால் அவசர பயன்பாட்டு உரிமத்தை (இ.யு.எல்.) ஒரு மாதத்தில் தந்துவிடலாம் அல்லது சந்தையிடுவதற்கான அங்கீகாரத்தையும் வழங்கலாம். அதன்பிறகு உலக சுகாதார நிறுவனத்தை நாங்கள் நாடலாம். அங்கு அங்கீகாரம் பெற்ற உடன், தடுப்பூசி வாங்க காவி போன்ற சர்வதேச அமைப்புகளை நாட முடியும்.

இதில் சீரம் இன்ஸ்டிடியூட், ஒரே நேரத்தில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பையும், உலக சுகாதார நிறுவனத்தையும் நாட முயற்சி செய்கிறது. இதனால் நேரம் மிச்சமாகும். இதெல்லாம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சரியாக நடந்து விட்டால் தடுப்பூசி திரளான மக்களின் பயன்பாட்டுக்கு கிடைத்து விடும்.

எங்கள் தடுப்பூசியின் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனை நடந்து முடிவதற்குள், பெருமளவில் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. இது, தடுப்பூசியை தாமதமின்றி மக்களுக்கு கிடைக்கச் செய்ய உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story