பதற்றத்தை தணிக்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - ரஷியா அறிவுறுத்தல்


பதற்றத்தை தணிக்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - ரஷியா அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 12 Nov 2020 10:45 PM GMT (Updated: 12 Nov 2020 10:17 PM GMT)

இந்தியாவும், சீனாவும் தங்களுக்கிடையிலான பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ரஷியா கூறியுள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவுக்கான ரஷிய துணைத்தூதர் ரோமன் பாபுஸ்கின் நேற்று இணையவழியில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஆசிய கண்டத்தின் இருபெரும் நாடுகளான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. அது எங்களுக்கு இயல்பாகவே கவலை அளிக்கிறது. எனவே, இரு நாடுகளும் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

இரு நாடுகளும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் ஆகிய அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளன. இதுபோன்ற பன்னாட்டு அமைப்புகளில் ஒத்துழைக்க வேண்டி இருக்கும்போது, பேச்சுவார்த்தைதான் நல்ல வழிமுறை.

உலகம் முழுவதும் நிச்சயமற்ற தன்மை நிலவி வரும்போது, இந்தியா-சீனா இடையிலான பதற்றம், இந்த பிராந்தியத்தில் ஸ்திரமற்ற தன்மையை உண்டாக்கி விடும். மேலும், பிற நாடுகள் இதை தங்களது அரசியல் ஆதாயத்துக்காக தவறாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது. சமீபத்தில், இரு நாடுகளும் சுயகட்டுப்பாட்டை கடைப்பிடிக்க முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story