ராகுல் காந்தி பற்றிய ஒபாமாவின் கருத்துக்கு சிவசேனா கண்டனம்


ராகுல் காந்தி பற்றிய ஒபாமாவின் கருத்துக்கு சிவசேனா கண்டனம்
x
தினத்தந்தி 14 Nov 2020 9:52 AM GMT (Updated: 14 Nov 2020 9:52 AM GMT)

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு சிவசேனா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மும்பை,

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு சிவசேனா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிவசேனா கட்சியின் எம்.பியும், தலைமைச் செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:  'ஒரு வெளிநாட்டு அரசியல் கட்சித் தலைவர், இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து இதுபோன்று கருத்துகளைக் கூற முடியாது. அவரின் கருத்துகள் வெறுக்கத்தக்கவை. நாங்கள் ஒருபோதும் டிரம்ப் பைத்தியக்காரர் என்று சொல்லமாட்டோம். இந்த தேசத்தைப் பற்றி ஒபாமாவுக்கு எவ்வளவு தெரியும்' எனக் கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி பற்றி ஒபாமா கூறியது என்ன?

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ‘எ பிராமிஸ்டு லேண்ட்’ (‘வாக்குறுதி அளிக் கப்பட்ட ஒரு நிலம்’) என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி, அதில் தனது அரசியல் வாழ்க்கையின் நினைவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த புத்தகத்துக்கு ‘நியுயார்க் டைம்ஸ்’ பத்திரிகை விமர்சனம் எழுதி உள்ளது. அதன்மூலம் அந்த புத்தக தகவல்கள் பகிரங்கமாக வெளியே வந்துள்ளன.

இந்த புத்தகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போது வெற்றி பெற்றுள்ள ஜனநாயக கட்சித்தலைவர் ஜோ பைடன் உள்ளிட்டவர்கள் பற்றியெல்லாம் குறிப்பிட்டுள்ளார். இவர்களைப்பற்றிய ஒபாமாவின் பார்வை வருமாறு:-

ராகுல் காந்தி பதற்றமானவர். அவர் ஒரு மாணவர் என்றால், பாடங்களை சரியாக கற்று ஆசிரியரை கவர்ந்திழுக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். ஆனால் அவரிடம் ஒன்றை தெளிவாக தெரிந்து கொண்டு அதில் வல்லவராக திகழ வேண்டும் என்ற அக்கறையோ அல்லது ஆர்வமோ இல்லை.

(ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது, ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக இருந்தார். ஒபாமா, 2017-ல் இந்தியா வந்தபோது அவரை ராகுல் சந்தித்தார். அந்த சந்திப்பு குறித்து டுவிட்டரில் அப்போது பதிவிட்ட ராகுல், “ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்தேன். அது ஒரு பயனுள்ள சந்திப்பு. மீண்டும் அவரை சந்திக்க ஆர்வம்” என குறிப்பிட்டிருந்தார்.)

காங்கிரஸ் தலைவர் சோனியாவை பற்றி குறிப்பிடுகையில், “நமக்கு சார்லி கிறிஸ்ட், ரஹீம் இமானுவல் போன்ற ஆண்களின் அழகு பற்றிதான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் பெண்களின் அழகு பற்றி அல்ல. இதற்கு சோனியா காந்தியைப் போன்ற ஒன்றல்லது இருவர் விதிவிலக்கு” என கூறி உள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி குறிப்பிட வந்த ஒபாமா அவரை அமெரிக்காவின் முன்னாள் ராணுவ மந்திரி பாப் கேட்சுடன் ஒப்பிட்டுள்ளார். இருவருமே உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருப்பதில் ஒற்றுமையை கொண்டிருந்தனர் என கூறி உள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் பற்றி எழுதுகையில், “ ஜோ பைடன் கண்ணியமானவர். நேர்மையானவர். நம்பிக்கைக்கு உரியவர்” என ஒபாமா சான்றளித்து உள்ளார்.


Next Story