கேல் ரத்னா விருதை திருப்பி அளிப்பேன்: குத்துச்சண்டை வீரர் விஜேயந்தர் சிங்


கேல் ரத்னா விருதை திருப்பி அளிப்பேன்: குத்துச்சண்டை வீரர் விஜேயந்தர் சிங்
x
தினத்தந்தி 6 Dec 2020 11:05 AM GMT (Updated: 6 Dec 2020 11:05 AM GMT)

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால் தனக்கு வழங்கப்பட்ட கேல் ரத்னா விருதை திருப்பி அளிப்பேன் என்று குத்துச்சண்டை வீரர் விஜேயந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் போர்க்கொடி தூக்கி, டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

11-வது நாளாக தொடரும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தால், டெல்லி எல்லைப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சு முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை.  

இந்நிலையில் டெல்லி சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டத்தில் குத்துச்சண்டை வீரர் விஜேயந்தர் சிங் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

எங்களுடைய மூத்த சகோதரரான பஞ்சாப் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் அரியானாவைச் சேர்ந்த இங்கு வந்துள்ளேன்.  மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறாவிட்டால், விளையாட்டுத் துறையில் உயர்ந்த விருதான எனக்கு வழங்கப்பட்ட ராஜீவ் கேல்ரத்னா விருதை மத்திய அரசிடம் நான் திருப்பி அளிப்பேன். விவசாயிகள் ஒற்றுமை எப்போதும் இருக்க வேண்டும், எதிர்காலத்திலும் இருக்க வேண்டும்” என்றார்.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் விஜயேந்தர் சிங் சேர்ந்தார் என்பது கவனிக்கத்தக்கது. 

Next Story